அண்ணன் காலையில வயலுக்குப் போயிட்டு ராத்திரிக்குத் தான் வாறவரு... இந்த ஊர... இன்னிக்குத்தான் பகலுல பாக்காரு... அதுவும்... நீ வில்லடிக்கிறதால... நாங்க படுற பாட்டை நினைச்சுப் பார்த்தால், உனக்கு எப்படி படிக்க மனசு இல்லாமப் போகும்?”
எங்கேயும் தோன்றும், மாமியார்-மருமகள் மகாயுத்தம் அங்கேயும் தோன்றியது. வெள்ளையம்மா, மகன் மூலம் எச்சரித்தாள்.
“அவனே சித்தம் கலங்கி நிக்கான். இதுக்குமேல பேசக் கூடாதுன்னு சொல்லுடா...”
ஆறுமுகப்பாண்டிக்கு, தாயே பேசச் சொல்லிக் கொடுத்தது போலிருந்தது.
“எதுக்கும்மா சொல்லணும்? முழுத்த ஆம்பளைப் பயல்... ஓடுற பாம்பை பிடிக்கிற வயசு... காலேஜுக்குப் போகமாட்டேன், பயமா இருக்குன்னு சொன்னால், அவள் கேட்கக் கூடாதா? முட்டையிடுற கோழிக்குத்தான் பிட்டி வலிக்கும்... ஒன் மருமகள் நகையை அடகு வைச்சுத்தான் காலேஜுக்கு பணம் கட்டுனோம்...”
மரகதத்தால், மேற்கொண்டு பொறுக்க முடியவில்லை. அண்ணன், அண்ணி முகங்களைப் பார்க்காமலே பழையதைக் கிளப்பினாள்.
“இப்படி ஒரு விவகாரம் வரப்படாதுன்னுதான் அப்பா, தீர்த்து வெச்சுட்டார். தம்பிய படிக்க வைக்க வேண்டியது அண்ணன் பொறுப்பு. அதுக்காக தன் பங்கு நிலத்துல ஆறு மரக்கால் விதப்பாட்டை விட்டுக் கொடுக்க வேண்டியது தம்பியோட பொறுப்புன்னு...”
“எழா மரகதம்... எனக்கும் அவனுக்கும் இடையில நெலமா குறுக்க நிக்கும்? அப்பா சொல்லிட்டார்னு இவன் தந்தாலும் இவன் பங்கு நெலத்தை நான் வாங்குவனா?”
“நீ சும்மா கெட அம்மாளு... இது எங்க வீட்டு விவகாரம்... அடுத்த வீட்டுக்குப் போறவளுக்கு என்ன வந்திட்டு?”
“எந்த வீட்டுக்குப் போனாலும் இவன் என் தம்பிதான்...”