அறையில் நடந்த ரகளையை மறந்தான். பேருந்தில் வாங்கிய உதையை மறந்தான். வீட்டில் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைத் துறந்தான். அவனையே பார்த்தான். அவனையே கண்களால் பந்தாடி, மற்றவர்களிடமிருந்து தனிப்படுத்திப் பார்த்தான். அவனைப் பற்றி யாரிடமாவது சொல்லவில்லையானால், அவனுக்கு தலையே பந்தாகிவிடும் போல் தோன்றியது. அக்கம் பக்கம் பார்த்தான். ஆண் கிரவுண்டுக்கும், பெண் கிரவுண்டுக்கும் இடையில், ஒருத்தி இவனை மாதிரியே அவனைப் பார்த்தாள். விளையாட வராமல், வெறுமனே வந்தவள். அவளும், அந்த வாலிபால் வீரனின் கைக்குள் தானே பந்தானதுபோல் முகத்தை லாவகமாக ஆட்டினாள். ‘சபாஷ்’ என்றுகூடச் சொல்லிக் கொண்டாள். அவன், ஆடி முடித்து வெறும் ‘பாடியோடு’, திரும்பிப் போவது வரைக்கும் அங்கே தவம் செய்யப் போவதுபோல், ஒரு தந்திக் கம்பத்தின்மேல் சாய்ந்து கொண்டாள். இவளும், அந்த ‘வாலிபால்’, வீரனோடு எம்.பி.பி.எஸ் படிப்பவள் தான். முதலாவது ஆண்டிலேயே அவனே, இவளிடம் வலியப் பேசினான். ஆனால், கிராமத்துக்காரியான இவளின் ஆரம்பக் கூச்சத்தை, அலட்சியமாக எடுத்து, ஒதுங்கிக் கொண்டான். போதாக் குறைக்கு அவனது சீனியர்கள் “விட்டுத் தள்ளுடா. தானா வருவாள்; ஆரம்பத்துல எல்லா எம்.பி.பி.எஸ் பொண்ணுங்களும் எம்.எஸ்.எம்.டி. படித்தவனைத் தேடுவாளுங்க. மூணாவது வருடம்தான் கிளாஸ்மேட்கள் கண்ணுக்குத் தெரியும்” என்று பொதுப்படையாய்ச் சொன்னதை அந்த வாலிபால்காரன் தனக்குள் தக்க வைத்துக் கொண்டான். இது, இவளுக்கும் தெரியும். ஆகையால் இன்றாவது அவனை எப்படியாவது ‘கங்கிராட்ஸ்’ சொல்லிக் கவனத்தைக் கவர வேண்டும் என்று துடியாய்த் துடித்தாள்.
இந்தச் சமயத்தில், தனது தோளில், ஏதோ ஒன்று உரசுவதைப் பார்த்து கவனம் கலைக்கப்பட்ட கோபத்தில் திரும்பினாள். சுயம்புவோ, அவளிடமிருந்து ஒரு அங்குலம் கூடப் பிரியாமல் பேசினான்.
“அவரு ரொம்ப நல்லா ஆடுறார் இல்லியா?... எம்மாடி... இப்படி யாரும் ஆடி நான் பார்க்கலை... ஆமா, இவரு பேரு என்ன. எந்த கோர்ஸ் படிக்காரு...”
“தள்ளி நில்லுடா ராஸ்கல்... டர்ட்டி ஃபெல்லோ... என்னடா நினைச்சுக்கிட்டே..."
சுயம்பு, எதையும் நினைக்காமல், சும்மாவே நின்ற போது, அவள் கூச்சல் போட்டாள். அந்த ஒற்றைக் கூச்சல், வாலிபால்-கூடைப்பந்து கூட்டத்தில் எழுப்பிய கூச்சல்களை