“அப்போ நாங்கல்லாம் மெண்டலா? இதுக்குத்தான் எம்.பி.பி.எஸ் திமுருன்னு பேரு... மெண்டல் என்ன செய்யுமுன்னு சுயம்புமாதிரி செய்து காட்டட்டுமா?”
இப்படிச் சொன்னவன், அந்த டாக்டர்-மாணவிகளைப் பயமுறுத்துவது போல் அவர்களை ஓரம் சாய்த்துப் பார்த்தான். அந்த மாணிவிகள் பயந்துபோய் ஓடப்போன போது அவர்கள் தரப்பிலேயே சில மாணவர்கள் அவர் களைத் தடுத்தார்கள். இதற்குள் டேவிட் சிறிது ஆர்ப்பாட்டக் குரலோடு பேசினான்.
“உங்களுக்குப் புரியாவிட்டால் நான் என்ன செய்ய முடியும்? அவருக்கு ஏதோ ஒரு மனநோய். மனநோயும், வயிற்றுவலி, தலைவலி மாதிரி யாருக்கும் எப்போ வேண்டுமானாலும், வரலாம். இதுல வெட்கப்படுறதுக்கு ஒண்ணு மில்லை. எங்க விசிட்டிங் புரபசர் பரமசிவம் மன இயலில் ஒரு அதாரிட்டி. கோவில் பக்கம் கிளினிக் என் பேரைச் சொல்லுங்க...”
“நீங்க என்ன புரட்சித் தலைவரா இல்ல தமிழினத் தலைவரா, சொன்ன உடனே தெரிஞ்சுக்கிறதுக்கு! உன் பேரைச் சொல்லேன் மிஸ்டர்.”
“பால் கொடுக்கிற மாட்டை பல்லைப் புடுங்கிப் பார்க்காதீங்க... ஆனாலும் அவரைப் பாக்கிறதுக்கு மனசுக்குக் கஷ்டமா இருக்கறதாலதான் சொல்றேன். அவரு முகத்துக்காக உங்க முகத்தை அப்படியே விட்டு வைக்கோம். கிண்டல் யாருக்கும் பொதுச் சொத்து இல்ல. ஓ.கே. என் பேரு டேவிட்... டாக்டர் பரமசிவத்துக்கிட்ட, நான் அனுப்புனேன்னு சொல்லுங்க... வேணுமுன்னா நானும் வாறேன். இந்தாப்பா ஆட்டோ...”
ஒரு மாணவனையும், ஒரு மாணவியையும் எல்லை வரைக்கும் ஒன்றுபட்டு கொண்டுவந்து விட்டு, பிறகு, அந்த மாணவியை மட்டும் ஒரு விடுதியில் சேர்ப்பித்து விட்டுத் திரும்பிய ஆட்டோ, அலறியபடியே நின்றது. மூர்த்தி, டேவிட்டையே பார்த்துக்கொண்டு நின்ற சுயம்புவைப் பிடித்து ஆட்டோவில் தள்ளினான். அப்படியும் அவனும் அந்த டேவிட்டை-அமைதி ஒளிரும் அந்த முகத்தையும், அழுத்தம் தழும்பும் அந்த மார்பையும் மாறிமாறிப் பார்த்தான். இதற்குள், மூர்த்தியும் முத்துவும் சுயம்புவுக்கு இருபுறமும் ஏறிக் கொண்டார்கள். மாணவர் கவனம் முழுவதும் சுயம்பு மேல் திரும்பியது. இதனால் போரடித்த பலர், கூட்டம் கூட்டமாய்,