அந்தப் பெண்ணைச் சுற்றி நின்ற ஒருத்தி, அவளிடம் விவரம் கேட்டாள். அவள் சொன்னபோது, அதையே கேட்டுக் கொண்டிருந்த இன்னொருத்தியும் ஒன்ஸ்மோர் கேட்டாள். இது போதாது என்று, இந்த டேவிட் அந்த ‘பாஸ்டர்டைக்’ கீழே தள்ளிவிட்டு அந்த இடத்தில் தன்னை வைத்துக் கொள்ளுவதற்குப் பதிலாக, அவனுக்கே சப்போர்ட் செய்வது மாதிரி பேசுகிறான்... அய்யோ... நான் அநாதையாயிட்டேனே...
அந்தப் பெண்ணின் கூச்சலும், சுயம்புவின் கூச்சலும் வெளியே உள்ளவர்களை உள்ளே இழுத்துக் கொண்டு வந்தன. எப்படியோ விஷயத்தை யூகித்துக் கொண்டார்கள். சிலர், சுயம்புவைக் கதாநாயகத்தனமாகவும் பார்த்தார்கள். கூட்டத்தில் முண்டியடித்து முன்னால் வந்த மூர்த்தியும், முத்துவும் எம்.பி.பி.எஸ். மாணவர்களிடம் மாறி மாறிக் கெஞ்சினார்கள்.
“இவன் எங்க கிளாஸ்மேட்... அதோட ரூம்மேட். எலெக்ட்ரானிக் அண்ட் டெலிகம்யூனிகேஷன் கோர்ஸிலே பஸ்ட் இயர் படிக்கான். கொஞ்ச நாளாவே மனசு சரியில்ல. வேணுமுன்னு செய்திருக்க மாட்டான். இந்தத் தடவை விட்டுடுங்க...”
ஒரு எம்.பி.பி.எஸ். முதலாண்டு எகிறியது. அப்படியாவது சீனியர்கள் தன்னை ரேக்கிங் செய்வதை நிறுத்துவார்கள் என்ற நப்பாசை.
“எப்படியா விட முடியும்... ஆப்டர் ஆல் ஒரு என்ஜினியரிங் ஸ்டூடண்ட்... ஒரு எம்.பி.பி.எஸ். பொண்ணு கிட்ட வம்பு செய்யுறதா.”
“யோவ் மாங்கா மடையா... என்னடா ஆப்டர் ஆல்... எம்.பி.பி.எஸ்னா பெரிய கொக்காடா?”
வெடவெடப்பான மூர்த்தி எகிறினான். அங்கே பொறியியல் மருத்துவக் கல்லூரி மகாயுத்தம் வரப் போவது மாதிரியான நிலமை.
மாணவர்கள், வியூகம் வைக்கப் போனார்கள். மாணவிகளில், வீராங்கனைகள் தவிர, மற்றவர்கள் அழப் போனார்கள்.
அந்த மாணவர்கள், ஒன்றை ஒன்று தொட்டுக் கொள்ளும் சின்னச் சின்ன வட்டங்களாக நின்றனர். அவர்களை அறியாமலே அவர்கள் அடிமனதில் ஏற்பட்ட குழுஉணர்வு அங்கே