அந்த விவகாரத்தில் ஏற்பட்ட உள் விவகாரங்களும் புரிந்தன. எம்.பி.பி.எஸ் மாணவர் களோடு எந்தத் தொடர்பும் இல்லையென்று நிரூபிக்க வேண்டியது ஒரு கடமையாகிவிட்டது. பழக்கப்பட்ட, பரிச்சயப்பட்ட டாக்டர் பையன்களைக்கூட, கண்ணால் விலக்கி வைத்துவிட்டு எம்.பி.பி.எஸ். மாணவிகளை எந்த சம்பந்தமும் இல்லாமல் திட்டினார்கள்.
“பார்க்கறதுக்கு அழகா... ஒரு அப்பாவி கிடச்சால் போதும் விடமாட்டிங்களாடீ..!”
“ஆமாங்கடி... இந்த ஆணழகனை. நீங்களே வச்சுக்கங்க...!”
“ஒங்களுக்கு மனிதாபிமானமுன்னு எதுவும் இருக்க முடியாது. ஏன்னா, பிணங்களைப் பார்த்துப் பார்த்து பிணங்களாப் போன ஜென்மங்கள் நீங்க...”
ஆண் டாக்டர் மாணவர்களுக்கு, இது ஒரு வர்க்கப் பிரச்னையாகி விட்டது. ஆளுக்கு ஆள் எகிறினார்கள். சுயம்பு மேல் போடப்பட்ட பிடியை நெருக்கினார்கள். இதனால் மூர்த்தி பயங்கரமாய் கத்தினான்.
“ஏப்பா. நான்தான் சுயம்பு ஒருமாதிரி. கொஞ்ச நாளா மனநிலை சரியில்லாம இருக்கான்னு சொல்றேனே! அப்படியும் அவனைப் பிடிச்சு வைச்சிங்கன்னா என்ன அர்த்தம்! விடப்போறீங்களா. விட வைக்கணுமா...”
சுயம்பு விவகாரத்தையே, மறந்துபோன மாணவர்களுக்கு, அப்போதுதான் அவன் நினைவும், நிலையும் மனதுக்கு வந்தன. அவனைத் தன் மார்போடு சேர்த்து அடைக்கலமாக வைத்திருந்த டேவிட், சுதாரித்தான். அப்போதும் கோழி, குஞ்சுகளை இறக்கைக்குள் வைப்பது மாதிரி சுயம்புவை மார்போடு போட்ட கைக்குள் வைத்துக் கொண்டே நடந்தான். முத்துவின் தோளைப் பிடித்துக்கொண்டு, குதியாய்க் குதித்துக் கொண்டிருந்த மூர்த்தியிடம், சுயம்புவை மென்மையாகப் பிடித்துத் தள்ளினான். பிறகு “இவர சைக்கியாட்ரிஸ்ட் கிட்ட கூட்டிட்டுப் போங்க” என்று சொன்னபடியே, எதிர்ப்பந்தை எதிர்பார்த்து எப்படி பின்னால் நகர்வானோ, அப்படி நகர்ந்தான். அவன் அப்படி நகர, நகர, பொறியியல் மற்றும் பட்டப் படிப்புக்கள் முன்னால் நகர்ந்தன. ஒரே கசாமுசா சப்தம், அதற்கான காரணத்தை ஒருத்தன் கண்டு பிடிப்பாய்ச் சொன்னான்.