குறியீடுகளாகத் தெரிந்தன. பட்டப் படிப்பு மாணவர்களும், வேடிக்கை பார்ப்பதற்காக வந்து, இப்போது இந்தச் சண்டையில் கலந்து கொண்டார்கள். அத்தனைபேரும், வட்டத்திற்குள் வட்டமாய் காணப்பட்டார்கள். அந்த வட்டத்திற்குள்ளும் ஆண்டுவாரியான நெருக்கங்கள். கோர்ஸ்வாரியான நெருக்கங்கள். ஆண்கள் மேல் படரும் கொடிகளாக, டாக்டர்-மாணவிகள் ஒவ்வொரு ஆண் எம்.பி.பி.எஸ். கழுத்துக்கு மேலே புடவை படத் தலை சாய்த்து நின்றார்கள். இது வேறு, மற்ற மாணவர்களுக்கு வயிற்றெரிச்சலைக் கொடுத்தது. பொதுவாக மற்ற மாணவர்களை அலட்சியப்படுத்துவதாக வெள்ளைக் கோட்டுக்காரர்கள்மீது ஒரு குற்றம் சாட்டப் படுவதுண்டு. ஆகையால் அவர்களை ஒரு நாளைக்காவது கறுப்பு கோட்டு போட்டு துக்கிக்க வைக்க வேண்டுமென்று, மற்ற மாணவர்களுக்கு ஒரு வேகம். இந்தச் சமயத்தில் எல்லோராலும் இளக்காரமாய்க் கருதப்படும் இன்னொரு பையன், எம்.பி.பி.எஸ். சார்பில் ஒரு போடு போட்டான்.
“ஆமாங்கடா... எம்.பி.பி.எஸ்.னா கொக்குதான். ஒங்க ‘ஸைடு’ மாணவிகள் கிட்ட கேட்டுப் பாருங்க. அவள்களுக்குத் தெரியும். நீங்க முருங்கை மரம், நாங்க புளிய மரம்.”
ஏற்கெனவே. இந்த சமாசாரத்தில் ‘நொந்து’ போயிருக்கும் இதர மாணவ அணிகள், கொதித்துப் போயின. ஆங்காங்கே லைட்டுகளைப் போட்டுக்கொண்டு வராண்டாவில் நின்ற பெண் விடுதிகளை, ஆண்மையோடு பார்த்தார்கள். ஒருசிலர் அங்கிருந்த பெண்களைத் தங்கள் பக்கம் வரச் சொல்லிக் கையாட்டினார்கள். உடனே எம்.பி.பி.எஸ். மாணவர்களும் சேர்ந்து கையாட்டினார்கள். அந்தத் தெரு ராமர்களுக்கு, அங்கேயே அந்த மாணவ சீதைகளுக்கு ஒரு அக்கினிப் பரீட்சை நடத்த வேண்டு மென்று துடிப்பு. இதற்குள் எம்.பி.பி.எஸ். கிடைப்பதற்காகப் படித்து, பிறகு பொறியலில் சேர்வதற்காக விண்ணப்பித்து, இறுதியில் பட்டப் படிப்பிலும் பாடாவதியான ஒரு பி.ஏ.க்காரன் பெருமிதமாகப் பேசினான்.
“பொல்லாத எம்.பி.பி.எஸ்... ஊசி போட்டுப் போட்டே ஊசிப் போறவங்க... நாங்க அப்படியில்ல. ஐ.ஏ.எஸ்ஸா வருவோம். ஐ.பி.எஸ்ஸா வருவோம். நீங்க ஊசியும் கையுமா நின்னாலும், எங்களுக்கு சல்யூட் அடித்தே ஆகணும். ஒரு கான்ஸ்டேபிள் அதட்டலுக்குப் பயந்தே, கஸ்டடி டெத்த, இயற்கையான மரணம்ன்னு செயற்கையாச் சொல்ற பசங்களுக்கு வாய் வேறயா?”
பல மாணவர்கள் ‘ஹியர், ஹியர்’ என்றார்கள். பலமாகக் கை தட்டினார்கள். இதற்குள் மற்ற துறை மாணவிகளும் அங்கே வந்துவிட்டார்கள். அவர்களுக்கும், சுயம்புவின் விவகாரமும்,