"பாருவுக்குக் கல்யாணம் ஆகவேண்டும். அதற்காகத் தான் இந்தக் கல்யாணம் பண்ணிக் கொள்ள நினைத்திருக் கிறேன். காமுவைப் பற்றி எனக்குத் தெரியும். பதவிசும், அடக்கமும், பொறுமையுமே உருவானவள் அவள். இவ்வளவு பெரிய பாரத்தை அவளால் வகிக்க முடியும் என்கிற தீர்மானத்தால் தான் நான் தங்களைத் துணிவுடன் கேட்கிறேன்" என்று அவனிடமிருந்து வந்த கடிதத்தை ராமபத்திரய்யர் கண் கலங்க வாசித்தார்.
வளர்பிறை மதியம் போல் விளங்கும் காமுவின் அழகு, கேவலம் மூன்றாந்தாரமாகத்தானா வாழ்க்கைப்பட்டு மாய்ந்து போக வேண்டும்? பதினெட்டு வயதுப் பெண்ணின் மனத் துடிப்புகளையும், இருதய தாபங்களையும் ஏழு குழந்தைகளுக்குத் தகப்பனாகி இருப்பவனால் உணர முடியுமா?
“ஏழை என்கிற ஒரே காரணத்தினால் அல்லவா முத்தையா துணிந்து என்னைப் பெண் கேட்கிறான்?" என்று பொருமினார் ராமபத்திரய்யர்.
வழக்கம் போல் எங்கோ போய்விட்டுத் திரும்பிய விசாலாட்சி, கணவன் கையில் கடிதம் இருப்பதைப் பார்த்து ஊஞ்சலுக்கு எதிரில் வந்து உட்கார்ந்து கொண்டு, "எங்கேயிருந்து கடிதம் வந்திருக்கிறது?" என்று கேட்டாள்.
“உன் தம்பி எழுதி இருக்கிறான்!" என்று சுருக்க மாகவே கூறி, கடிதத்தை அவளிடம் கொடுத்து விட்டுக் கொல்லைப் பக்கம் போனார் ராமபத்திரய்யர்.
விசாலாட்சி கடிதத்தைக் காமுவிடம் கொடுத்துப் படி க்கச் சொல்லிக் கேட்டாள். "முத்தையா மாமாவுக்குக் கல்யாணம்' என்றதும் காமுவுக்குச் சிரிப்பு வந்தது. ஆனால், மணப் பெண்ணாகத் தன்னைக் கேட்கிறார் என்பதைப் படித்ததும் அவள் முகம் வாட்டமடைந்தது. கடிதத்தை உறையில் போட்டு கூடத்தில் மாட்டியிருந்த கடிகாரத்தின் பின்னால் செருகி வைத்து விட்டுக் காமு சவுக்கம் பின்ன ஆரம்பித்தாள். விசாலாட்சி சிறிது நேரம் ஒன்றும் பேசாமல் ஊஞ்சலில் உட்கார்ந்திருந்தாள்.
கடுதாசியைப் பற்றி அப்பா ஏதாவது சொன்னாரா?” என்று பெண்ணைப் பார்த்துக் கேட்டாள்