(Reading time: 22 - 44 minutes)
Panithuli - Saroja Ramamoorthy
Panithuli - Saroja Ramamoorthy

அவள்.

   

“கடிதம் வந்தது. படித்துக் கொண்டிருந்தார். அதற்குள் நீங்கள் வந்துவிட்டீர்கள்" என்றாள் காமு.

   

“நான் வந்து என்ன புரட்டப் போகிறேன். என் வார்த்தை என்றால் தான் உன் அப்பாவுக்கு ரொம்பவும் அலட்சியமாச்சே!" என்று சலித்துக் கொண்டாள் விசாலாட்சி.

   

கொல்லையில் கிணற்றங்கரையில் வாழை மரங் களுக்கு இடையில் போடப்பட்டிருந்த கல்லில் உட்கார்ந்து என்னவோ யோசித்துக் கொண்டிருந்தார், ராமபத்திர அய்யர். அந்த வருஷம் நல்ல மழை பெய்திருந்ததால் அவர் வீட்டுக் கொல்லையிலிருந்து பார்த்த போது பொன்மணி கிராமத்து ஏரியில் சமுத்திரம் போல் தண்ணீர் ததும்பிக் கொண்டிருந்தது தெரிந்தது.

   

ஏரியில் படகு ஒன்றில் செம்படவ தம்பதி மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். காற்றுடன் கலந்து வந்தது அவர்கள் களிப்புடன் பாடும் இசை. இளமையும் ஆனந்தமும் தளும்பி நின்றது, அவர்கள் வாழ்க்கையில்.

   

சமூகத்தில் ஏற்றத் தாழ்வையும், வாழ்க்கையில் ஆனந்தத்தையும் அளிப்பது பணம் ஒன்றுதான் என்று தோன்றியது ராமபத்திரய்யருக்கு, இல்லாவிடில் பணக்கார வீட்டுப் பெண்களைவிட எந்த விதத்திலும் காமு தாழ்ந்தவள் அல்ல. அழகும் அறிவும் அவளிடம் இருக்கிறது. இருந்தாலும் ஏழ்மை அவளைச் சமூகத்தில் ஆனந்தமாக வாழவிடாமல் தடை விதிக்கிறது. பணம் இல்லாமல் அவளை ஏற்க யாரும் துணிவுடன் வரத் தயங்குகிறார்கள். முத்தையா கூட தன்னிடம் பணம் இருக்கும் காரணத்தால் தன் வயதையும் யோசியாமல் மூன்றாந்தாரமாக அவளைக் கொடுக்கும்படி கேட்கிறான். ஆனால், செம்படவ தம்பதிக்கு அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான வருமானம் கிடைக்கிறது. அதோடு அவர்கள் திருப்தி அடைகிறார்கள். களிப்புடன் வாழ்கிறார்கள்.

   

ராமபத்திரய்யர் பெருமூச்சுடன் உட்கார்ந்திந்த கல்லை விட்டு எழுந்தார். மத்தியான வெயில் சுரீர் என்று அவர் வழுக்கை மண்டையைச் சுட்டது. நெஞ்சிலே சுட்ட முத்தையாவின் கடிதம் போல் அது அவ்வளவு தீட்சண்ய மாக இல்லை அவருக்கு.

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.