Flexi Classics தொடர்கதை - பரிமள கேசவன் - 04 - வை. மு. கோதைநாயகி அம்மாள்
பிறைமதி - நிறைமதி
பரிமளவல்லியின் புகழ் வளர்பிறை மதியம் போலப் பிரகாசிக்கத் தொடங்கியது. பரிமளாவும் கேசவனும்- சிறுமியும் சிறுவனும் - நடிக்கும் திறனும், பாடலின் எழிலும் பொது மக்களின் மனத்தை முக்கியமாகக் கவர்ந்தன. அதோடு அந்த நாடகத்தின் பணம் முற்றும் முக்கியமான தர்ம ஸ்தாபனங்களுக்கே செல்வதால் அது விஷயத்தில் பொது ஜனங்களுக்கு ஒர் வெறுப்பேற்படாமல் விருப்பும் வாஞ்சையுமே ஏற்பட் டது. அதனால் கம்பெனிக்கு அபரிமிதமான செல்வமும், செல்வாக்கும், கீர்த்தியும் உண்டாகி விட்டது.
ஆதி காரணமாகக் கம்பெனி ஆரம்பித்ததை உத்தேசித்து ஜனங்கள் முதலிலிருந்தே நல்ல ஆதரவு கொடுத்துதவினார்கள். பொன்னுசாமி தன் பெற்றோருடன் யாத்திரை சென்று விட்ட பின்னர் அவனுடைய மனச் சாக்ஷியே அவனை பலமாகக் கண்டித்து நல்வழியில் திருப்பி விட்டது. சுமார் ஒரு வருட காலமாக அவர்கள் யாத்திரை செய்தார்கள். மன வேதனையின் பலனாக பொன்னுசாமியின் பெற்றோர்கள் ஒவ்வொரு ஊரில் ஒவ்வொருவர் உயிர் நீத்து விட்டார்கள். பொன்னுசாமி தனித்துப் பரதேசியாக நின்றான்.
------
பிறகு தன் ஊர் திரும்பினான். அவன் அனேக இடங்கள் யாத்திரை செய்ததின் பயனாக அனேக ஏழைப் பரதேசிகளின் துயரத்தையும் ஆங்காங்கு மக்கள் படும் கஷ்டத்தையும் கண்டு எவ்விதத்திலாவது அவர்களுக்கும் அவ்வகையோரான இன்னும் மற்றையோருக்கும் உதவி செய்ய வேண்டும் என்று மனத்தில் நினைத்து வெகுவாய் யோசனை செய்ததில் 'பணம் லகுவில் திரட்டக் கூடிய வகையில் நாடகக் கம்பெனியே சிறந்தது' என்று அநேகர் யோசனை கூறி நன்றாகச் சங்கீதம் தெரிந்த பெரிய மனிதர்கள் எல்லாம் இனாமாக நடிப்பதாக ஒத்துக் கொண்டு ஆதரவளிக்க முன் வந்தார்கள்.
அதன்மேல் கம்பெனி ஆரம்பமாகி வெகு சிறப்பாக நடந்து கொண்டு வந்தது. அந்த பணத்தில் தர்ம பாடசாலை, வைத்திய சாலை, ஏழைக் குழந்தைகளை - அனாதைக் குழந்தைகளை- வளர்க்கும் சங்கம் முதலியன வெல்லாம் ஸ்தாபனம் செய்தான். கேசவன் வந்து சேர்ந்த பிறகு பொன்னுசாமியின் மனோபாவத்திற்கு உதவியாக வேண்டிய பொருள் கிடைக்கத்