இக்கடிதங்களினால் தத்தளிக்கின்றதே! இதனின்றும் விடுதலையடைய ஒர் மார்க்க மில்லையா!
ஆபத்ரக்ஷகா! எனக்கு வயதோ இன்னும் கேவலம் கொஞ்சமாக இருக்கிறது. இதற்குள் நான் எனது ஏழ்மை நிலைமையைக் கண்டு முதலில் ஒருவிதமாக வருந்தி கஷ்டப்பட்டுப் பின்னர் சற்று சுகமடைந்து தெம்பாகவிருந்து அந்த சந்தோஷம் வெகுநாள் நீடிப்பதற்குள்ளேயே என்னுடைய பிற்காலத்தின் நிலைமை, கண்ணாடியில் தெரிவதுபோலப் பிரகாசித்து என் துயரத்தை எடுத்துக் காட்டிப் பெருக்குகின்றதே! இதை நான் யாரிடத் தில் எடுத்துக்கூறுவேன்? எனக்கு வயது சிறியதாக இருந்தபோதிலும் என் நடிப்பில் நான் பணத்தையும் புகழையும் மட்டும் லக்ஷ்யம் செய்யாமல் நான் எடுத்துக்கொண்ட பாத்திரங்களாகிய சாவித்திரி, ஸீதை, நளாயணி, வள்ளி, சந்திரமதி, ருக்மிணி முதலியவர்களைப்போல எனது அனுபவத்திலும் தினசரி வாழ்க்கையிலும் நடந்துகொள்ளவேண்டும் என்கிற எண்ணமே மனத்தில் புகுந்து கொண்டிருக்கிறது. அதேபோல நான் என்னால் கூடியவரையில் சாவித்திரியைப் போல கற்பினும், சந்திரமதியைப்போல சத்தி யத்திலும், நளாயினியைப்போல பொறுமையிலும் பதி பக்தியிலும் இன்னும் மற்ற சற்குணங்களையும் கையாண்டு வருவதையன்றோ நான் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறேன்.
---
இந்தக் கடிதங்கள் அவற்றைக் குலைத்திடும் வழியிலல்லவோ என் பிற்காலத்திய நிலைமையை பயங்கரமாக எடுத்துக்காட்டுகின்றன. சீ! குழந்தைப் பருவமாக நாம் நாடகம் நடித்தது போதும். இனி நமக்கு நாடகம் வேண்டாம்" என்று மனந்தவித்துப் பலவிதமான யோசனையோடு உட்கார்ந்து விட்டாள்.
பரிமளவல்லியின் மீதுள்ள பிரியத்தினால் பொன்னுசாமி அவளை அடிக்கடி வீட்டில் வந்து சந்திக்கும் வழக்கப்படிக்கு அன்றும் வந்தார். அப்போது பரிமளா தன்னந்தனியாகத் தன்னறையில் உட்கார்ந்து சோகித்திருப்பதைக் கண்ட பொன்னுசாமி திடுக்கிட்டு அருகில் சென்று "செல்வீ! பரிமளா! என்ன இது! ஒரு நாளும் நான் கண்டறியாத நிலைமையில் விசனித்து வீற்றிருக்கிறாய்? கலக்கம் யாது? என்னிடம் தியங்காது சொல்வாய் அம்மா!" என்று வெகு வாஞ்சையோடும், உண்மையான பரிதாபத்துடனும் கேட்டார்.