பரிமள - அன்பார்ந்த பெரியவரே! நான் இதுகாறும் இத்தகைய நிலைமைக்கு வந்தது முற்றும் தங்களின் கிருபையினால் என்பதை மறவேன். நான் இனி அநாவசியமாய் உழைப்பின்றி உங்கள் பொருளுக்கு உரியவளாதல் பிழையேயாகும். என் மனம் அதற்குச் சம்மதப்படாது உங்கள் தயவினால் வாங்கப்பட்ட அனேக விலையுயர்ந்த ஆடையாபரணங்கள், பிறரால் வழங்கப்பட்ட பரிசுப் பொருள்கள் இவை எல்லாம் எனக்குத் தேவையில்லை. அவை பயனின்றி என் பெட்டியிலேயே தூங்குவதைவிட தாங்களே ஸ்வீகரித்து உபயோகப்படுத்திக் கொள்ள என் மனம் விரும்புகின்றது. தங்களின் அன்பு என்மீதிருக்குமாயின் ஒருவித குறைவுமில்லை, எனக்குத் தாங்கள் மாதம் 150 ரூபாய் சம்பளமாக இந்த இரண்டு வருடங்களுக்கு மேலாகக் கொடுத்து வந்ததில் நான் அதிகமாக எதுவும் செலவிடாமல் அதில் மிச்சம் செய்து இரண்டாயிரத்து ஐந்நூறு ரூபாய் என் தாயாரின்பேரில் பாங்கியில் போட்டு வைத்திருக்கிறேன். அதுவும் உங்களுக்குத் தெரிந்ததே! அந்த ரூபாயில் எனக்கு மாதம் கிடைக்கக்கூடிய வட்டியைக்கொண்டு என் காலத்தை நான் தாராளமாகக் கழிக்கலாம். பெரியவரே! என் விருப்பப்படி இவைகளை ஸ்வீகரிக்கவேண்டும்" என்று வேண்டினாள்.
அதே யோசனைக்கு அவள் தாயாரும் இசைந்ததால் பொன்னுசாமியும் அதற்கு உடன்பட்டான். பிறகு வெகுநேரம் பேசிய பிறகு அவர் கண்ணீர் பெருக "பரிமளா! நான் ஒரு விஷயம் வேண்டுகிறேன். அதாவது "நீ கடைசீயாக இன்னும் ஒரு நாடகம் மட்டும் நடித்துவிட்டு அதோடு இந்த வேலையை விட்டு விலகிக்கொள்" என்று கெஞ்சிக்கேட்டார். அதற்குப் பரிமளா யோசித்து இசைந்தாள். பிறகு பொன்னுசாமி போய்விட்டார்.
--------
பரிமளா வெகு கலக்கத்தோடு வீற்றிருந்தாள். அவளுடைய சகோதரியை ஆரம்பம் முதலே நல்ல கல்வி மார்க்கத்தில் பயிலுவிப் பதிலேயே பரிமளா இச்சித்திருந்தாளதலால் அவள் கல்வி கற்று வருகிறாள். சகுந்தலா என்கிற அப்பெண்மணியும் பரிமளாவைப் போலவே ஒழுக்கத்தில் பிறவிக்குணமாகவே அமைந்துவிட்டாள். அன்று நாடக நாள் அல்லவாகையினால் கேசவன் பரிமளாவின் வீட்டிற்கு வந்தான்.
சாதாரணமாக, கேசவன் பரிமளாவின் வீட்டிற்கு வருவது பழக்கமாதலாலும் அவனை அறியாத