------
பகவத் விஷயங்களையும் பக்தர்களின் விஷயங்களையும் கல்வியறிந்தவர்கள் நன்றாகப் படித்து அறிந்துவிடுகிறார்கள். எனினும் உலகத்துள்ள பல்கோடி மக்களின் போக்கும் ஒன்றுபட்டு வராது. சிலருக்குப் படித்தால் மனத்தில் பதிந்துவிடும். சிலருக்குக் கேட்டால் பதியும்; சிலருக்குப் பார்த்தால் பதியும். சிலருக்கு எதிலும் பதியாது. பல வேறுபட்ட பேதங்களிருக்கின்றன. அதை உத்தேசித்துத்தான் எல்லோருக்கும் நன்றாகக் கண்கூடாகப் பார்த்தால் நல்ல விஷயங்களை படிக்கத் தெரியாதவர்களுக்குக்கூட மனத்தில் பதியும் பொருட்டு நடித்துக் காட்டுவது என்று பெரியார் நாடகங்களை ஏற்படுத்தியதாகப் பெரியாரே சொல்ல நான் கேட்டிருக்கிறேன். பகவானுடைய குணங்களும், செய்கைகளும், பாகவதர்களின் பக்திப் பிரபாவமும் உலகத்தில் சகல ஜனங்களுக்கும் நன்றாக விளங்கவேண்டி சத்விஷயமான சரிதைகளையே நாடகமாக நடித்துப் பெரும் பயனை விளைவித்தார்கள். அந்த அரிய நாடகம் காலக்கிரமத்தில் அதன் கவுரவமே குறைந்து கேவலமாக மதிக்கக் கூடிய நிலைமையில் வந்துவிட்டது. அந்த இழிவு நமது நாட்டில் தினே தினே விருத்தியாகும்படியாக அனேக ஆபாசங்களும் விபரீதங்களும் உண்டாகிவிட்டன.
ஆனால் மேல் நாட்டில் இன்னும் நாடகத்திற்கும் நடிகர்களுக்கும் பேராதரவும் பெரும் புகழும் கொடுத்துவருகிறார்கள். அதனாலேயே அந்நாட்டில் நாடக உலகம் நலம் பெற்று விளங்குகின்றது. பரிமளா! உனது யோசனை என்னவோ மிகவும் ச்லாக்யமானதே! உன் மனத்திற்கு விரோதமாக நான் ஏதும் சொல்லத் தயாராக இல்லை. இக்காரியங்கள் செய்திருப்பது கேவலமான காலாடிக் கூட் டங்கள் என்பது உனக்கு நன்கு தெரியும், அத்தகையோரிடத்தில்தான் அதிகமான ஜாக்கிரதையுடன் இருக்கவேண்டும். என்னுடைய கம்பெனிக்கே ஓர் பரிமளத்தை அளித்த நீ நின்றுவிடுவதால் நாடகப் பிரியர்கள் மிக்க விசனிப்பார்கள். எல்லாம் காலச் சக்கரத்தின் சுழல்வு. இதை எண்ணி விசனிப்பதில் பயனில்லை. அம்மா! நீ நடிப்பதை நிறுத்திவிட்டதனாலேயே நான் உன்னை மறப்பேனென நினைக்காதே! உன்னாலும் கேசவனாலுமே என் கம்பெனிக்குப் புது மணமும் புத்துயிரும் உண்டாயது. ஏராளமான செல்வத்திற்கு கம்பெனி உரித்தாயது. தருமங்களைச் செய்ய சாதனமாயது. ஆதலால் உனது குடும்பத்தை நான் கைவிடமாட்டேன்.
-------