Flexi Classics தொடர்கதை - பரிமள கேசவன் - 05 - வை. மு. கோதைநாயகி அம்மாள்
புதையல் கண்டெடுத்த நிதிகள்
வனவாசம் செய்வது போலச் சென்ற கேசவனின் தாயாகிய கோமதியின் மனத் துயரம் இன்ன தென்று விவரிக்க வியலாத விதம் தினே தினே பெருகிக் கொண்டே சென்று அதன் பயனாக அவளை மிக்க துன்பத்திற் கிலக்காகும்படியாகச் செய்து விட்டது. அவள் தனது இரு பெண்களையும் வைத்துக் கொண்டு படும் பாதையை விவரிக்கவே இயலாது, தன் மனக் குறையை முறையிடுவதற்கு ஓர் தக்க துணை இன்றி பரிதபிக்கின்றாள். கோமதிக்கு ஒவ்வொரு தினமும் ஒவ்வொரு நிமிடமும் அவளை யறியாத திகிலும் பயமும் சதா மனத்தில் தோன்றி வருத்திக் கொண்டே இருக்கின்றது. எந்த நிமிடத்தில் தனக்கு எந்த விதமான ஆபத்து நேருமோ என்ற பீதி அவள் மனத்தில் அதிகரிக்க அதிகரிக்க அவள் பலம் குன்றி விட்டது, வேர்ப்புழு ஓர் செடியின் வேரைத் துளைக்க வாரம்பித்ததும் அச் செடி எப்படி பட்டுப் போய் பாழாகி விடுகிறதோ அது போல திகிலும் பீதியும் மன வருத்தமும் ஒன்று கூடி வேர் பூச்சியைப் போலக் கோமதியின் உயிரை வாட்டத் தொடங்கின. அதனால் அவள் அன்னமும் கொள்ளாது மெலிவுற்று தேக பலம் குன்றி வியாதியின் வசமானாள்.
'வேலை செய்வதற்குச் சீவனில்லை, மானமிழப்பதற்கும் மனமில்லை' என்கிற நோக்கத்தை யறிந்த தோட்டக்காரர்கள் பின்னும் அதிகமான கொடுமைகளைச் செய்வதோடு அடிக்கவும் தலைப்பட்டார்கள். எத்தனைத் துன்பங்களைச் செய்த போதிலும் தன்னையவர்கள் அடித்த போதிலும் கோமதி வாய் திறந்து ஏதும் பேசுவதையே விட்டு விட்டாள். அடியைப் படும் போதெல்லாம் "ஐயோ! அம்மா!" என்று கத்தாமல் கடவுளின் திருநாமங்களையே உச்சரித்துக் கண்ணீர் வடிப்பாள். பலஹீனம் அதிகரித்ததனாலும், மனோ வேதனையினாலும், புத்திர சோகத்தினாலும் அவள் வேலை செய்ய மாட்டாது விழுந்து விட்டாள். அந்நிலைமையிலும் அவளைக் கஷ்டப் படுத்தியே வந்தார்கள்.
------
இவ்வித வேதனைகளைப் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்திருக்கும் கோமதியின் காலம் அத் தீவில் சில வருஷங்கள் சென்றன. அவளுடைய பெண்கள் இருவரும் பெரியவர்களானார்கள். கோமதி படுக்கையிலேயே படுத்து விடும் நிலைமைக்கு வந்து விட்டாள். அன்னிலைமையில் அப் பெண்கள் தாயின் வேலையைச் செய்து பொருள் தேடித்