------
இச்செய்கையை அறிந்த பாலா "ஐயா! இதற்குத்தானா என்னை அவ்வளவு பிகுவுடன் அழைத்தீர்; உம்முடைய மோச எண்ணம் இன்னும் மனத்தைவிட்டு அகலவில்லை போலும். சேச்சே! என் கரத்தைப் பற்ற வரும் வெட்கம் கெட்டவரே! விலகும் தூர! என்னுடைய கரம் இவ்வல்ப மதியினருக்கு இலகுவில் கிடைக்கு மென்று நினைக்க வேண்டாம். நான் சென்று வருகிறேன். இதுகா றும் சொல்லிய வார்த்தை என்ன! 'கண்ணே! பெண்ணே!' என்கிற குலாவல் என்ன? உமக்கு மூளை கலங்கி விட்டதாகத்தான் தோன்றுகின்றது. என்னைச் சுற்றி போலீஸ் பக்ஷிகள் வட்டமிடுவதாக மிரட்டினீரே! உம்முடைய போலீஸ் பக்ஷிகளே என்னைக் கொத்தித் தின்னட்டும். நான் அத்தகைய பக்ஷிகளுக்கு இரையாகிறேன். ஆனால் காமாந்தகாரமான பெருங்கடலில் மூழ்கித் தத்தளிக்கும் உம்முடைய களங்கமான கரத்திற்கு நான் அகப்படமாட்டேன். சத்தியம்." என்று கூறி வெளியே செல்ல முயன்றாள்.
இதற்குள் அம்மனிதன் "கண்மணி! நீ கூறுவதன் உண்மையை நான் அறிந்தேன். உன்னுடைய பாரமார்த்தீகத்தைக் கண்டு நான் உள்ளம் பூரிக்கின்றேன். மகா பாவி, சண்டாளன், கொடிய பாதகனாகிய நான் உன் கரத்தைத் தீண்டுதற்கு அருகதை இல்லை. இது சத்தியமே! உண்மையே! என்னிலைமை என்னையே வெட்கித் தலைகுனியச் செய்கின்றது, எனக்கு புத்தி கற்பித்த உத்தமியே! பயப்படாதே; என்னருகில் வா!....வா! ...வா!... என் கண்ணே! .....என் கரத்திற்கு விருந்தளி....வா.... அருகில் வா. இப்பாவியின் உதிரத்தில்தான் நீ பிறந்தாய்! ....ஐயோ!...... எனது நாவால் கூறவும் வெட்கமாக விருக்கிறது... உன்னைப் பெற்ற தந்தையே உன் மீது பித்தங்கொண்டு சித்தம் சிதறியதை எண்ண என் ஜென்மம் கூசுகின்றதே! என் செல்வியே! என் பாலாம்பிகையே! என் கண்ணே! வா; என்னருகில் வா! உன் தந்தையை இனி உதாசீனம் செய்யாதே!" என்று கூறிக்கொண்டே பாலாவின் இரு கரங்களையும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டான்.
--------
இந்த அதியத்புதமான வார்த்தைகளைக் கேட்ட பாலாவின் நிலைமை திடுக்கிட்டு வியப்பே வடிவமாகிவிட்டது. அந்த மனிதனை ஏற இறங்கப் பலமுறை பார்த்தாள். தன் கையைத் திமிறிக் கொண்டாள். அந்த வார்த்தையை நம்பாது தவிக்கின்றாள். அவளுடைய அப்போதிய