Flexi Classics தொடர்கதை - பரிமள கேசவன் - 06 - வை. மு. கோதைநாயகி அம்மாள்
அன்பை அழிக்கும் துன்பப் பேய்கள்
பரிமளவல்லியின் விடுதிக்கு வந்த பெண்பிள்ளையைக் கண்டு ஆச்சரியங் கொண்ட பரிமளா வந்த அம்மாளை உட்காரச் செய்துத் தானும் உட்கார்ந்தான். அந்த அம்மாளின் வருகை பரிமளாவின் மனத்திற்குப் பலவிதமான சந்தேகங்களையும் கலவரங்களையும் கொடுத்தது. "உண்மையில் இவள் பெண்பிள்ளைதானா! அன்றி ஆண் பிள்ளை பெண் வேடந் தாங்கி வந்திருக்கலாமோ!" என்கிற சந்தேகமும் மனத்திடை எழுந்தது. வந்த பெண்மணியின் முகத்திலோ களையற்று, ஒளி மங்கி விசனமே வடிவமாகச் சோர்ந்து கிடப்பதும் தெற்றென விளங்குகின்றது. "இராக் காலத்தில் இங்கு திடீரென்று வரும் இப்பெண் பிள்ளை யார்? எதற்காக வந்தாள்?" என்று பலமான கேள்விகள் அவளது மனத்திடையே பிறக்க வாரம்பித்தன.
இத்தகைய யோசனைகளோடு அந்த அம்மாளிடம் எதுவும் பேசாமல் உட்கார்ந்திருந்த பரிமளாவை அங்கு வந்த அம்மாள் நோக்கி "அம்மா! உன் மனத்தில் தோன்றியுள்ன எண்ணங்களை உன் முகமே நன்கு எடுத்துக் காட்டுகின்றன. நீ யோசிப்பதுபோல நான் உனக்குத் தீங்கு எதுவும் இழைக்க வரவில்லை என்னுடைய வெட்கக்கேடான நிலைமையில் நான் வெளியில் வரவும், உன் போன்ற உத்தமியான சிறுமிகளைக் கண்டு மகிழவும் பாக்கியமற்றவள். இன்னும் ஓர் முக்கியமான காரணம் பற்றி நான் எனது வெட்கம், துக்கம் இரண்டையும் விட்டு இங்கே வந்திருக்கிறேன். பரிமளா!
-------
நான் பகிரங்கமான நாடக மேடையில் உன்னுடைய சங்கீதத் திறமையைக் கண்டு வியந்து ஆனந்த சாகரத்திலாழ்ந்திருக்கிறேன்; இருப்பினும் உன்னுடைய கோகில கானத்தை மீண்டும் நேரில் கேட்க மனம் ஆவல் கொண்டு தவிக்கின்றது ஒரு பாட்டு பாட முடியுமா?" என்று கேட்டாள்.
பரிமளா.- அம்மா! தாங்கள் வந்த காரியம் சங்கீதம் கேட்பதற்குத்தானா! அன்றி வேறு இருக்கின்றதா! அதையே முதலிலறியவில்லையே! தங்களுடைய விருப்பப்படிக்குப் பாடுகிறேன். முதலில் நீங்கள் யார், எங்கிருப்பது, எதற்காக வந்திருக்கிறீர்கள் முதலியனவற்றைத் தெரிந்துகொண்டு பிறகு பாடுகிறேன்.