Flexi Classics தொடர்கதை - பரிமள கேசவன் - 07 - வை. மு. கோதைநாயகி அம்மாள்
சினிமா நடிப்பு-இனிய சந்திப்பு
கோமதி,பாலா, கங்காதரன் ஆகியோர் “போலீஸ்” என்ற குரலைக் கேட்டு மிக்க கலக்கத்தை யடைந்து தத்தளிக்கின்றார்கள். கதவைப் பலமாகத் தட்டும் சத்தம் கேட்டதும் "ஐயோ! பேராபத்து வந்து விட் டதே! என்ன செய்வது? இவரை எவ்விதம் மறைப்பது?" என்ற கலக்கம் உண்டாகி விட்டது. "கதவைத் திறக்கின்றீர்களா, உடைத்து விடட்டுமா !" என்று வெளியில் குரல் கேட்டதும் பாலா ஒன்றுமே தோன்றாதவளாய் தம்பித்து விட்டாள்; எனினும் எப்படி யாவது தன் தந்தையை இச் சமயம் மறைத்து வைத்துத் தப்பித்துக் கொண்டு பிறகுதான் வேறு மார்க்கம் தேட வேண்டும் என்று தீர்மானித்து, உடனே ஒரு புடவையை எடுத்து கங்காதானுக்கு உடுத்தி, முட்டாக்கு இட்டுத் தன் தாயின் படுக்கையில் அவனைப் படுக்க வைத்து, தாயை எழுந்து தைரியமாய் உட்காரச் செய்து, கங்காதானின் கால் பாகத்தில் கோமதியும், தலைப் பாகத்தில் பாலாவும் உட்கார்ந்து கொண்டார்கள். கங்காதரனை பலமாக "ஐயோ! அப்பா!' என்று கத்தச் செய்ததோடு மஞ்சளும் சுண்ணாம்பும் குழைத்து முக க்ஷவரம் செய்த இடத்தில் அதை மறைக்கும் பொருட்டு நன்றாகத் தடவி விட்டதோடு "தலைவலி இன்னமும் தீர வில்லையா?" என்று கேட்டவாறு நீலாவைக் கதவைத் திறக்கச் செய்தாள்.
--------
நீலா கதவைத் திறந்த உடனே போலீஸ்காரர்கள் இரண்டு பேர் உள்ளே நுழைந்து “எங்கே! எங்கே! அந்த திருட்டுக் கொலைக்காரன் எங்கே!" என்று கூறிக் கொண்டே சுற்று முற்றும் தேடுகையில் "ஐயோ! என்னைக் காப்பாற்ற வேண்டும்; காப்பாற்ற வேண்டும்" என்று கூனிக் கொண்டே இரு பெண்களும், ஒரு ஆண்பிள்ளையும் அவ் வீட்டுப் புறக்கடைப் பக்கத்திலிருந்து ஓட்டமாய் ஓடிவந்து “ஹா! ஹா!" என்று தத்தளித்தார்கள்.
அவ்விதம் நடக்கும் என்று சற்றும் எதிர்பாராத பாலா, கோமதி முதலியோர் நடு நடுங்குகின்றார்கள். வந்த பெண் பிள்ளைகளை அந்த ஆள் இழுத்து பலாத்காரம் செய்கிறான். "ஐயோ! அம்மா!" என்று இருவரும் கத்திக் கதறிக்கொண்டு மூலை மூலையாக ஓடுகிறார்கள். "எனக்கு ஆபத்தில் ஆதரிப்போரில்லையா! கடவுளே!' என்று கத்தியவாறு ஒரு பெண் கீழே மூர்ச்சையாகி விழுந்து விட் டாள்.