Flexi Classics தொடர்கதை - பரிமள கேசவன் - 08 - வை. மு. கோதைநாயகி அம்மாள்
உயிரினும் இனியது உண்மைக் காதல்
கடிதத்தைப் படித்துக் கதி கலங்கிய பரிமளவல்லி தனது கண்களையே நம்பாமல் திரும்பத் திரும்ப பலமுறை படித்தாள்; "நண்பரே! இதென்ன விபரீதமான கடிதமாக இருக்கின்றதே! இதை யார் எழுதி இருப்பார்கள்! எனக்கு முன்பு அதிகப் பிரஸங்கியாய் எழுதிய மனிதர்கள் யாரேனும் தங்களையும் மிரட்ட எண்ணி இவ்விதம் செய்திருப்பார்களா! எனக்கும் ஒன்றும் புரியவில்லையே!" என்று பரிதாபமாகச் சொன்னாள். இது கேட்ட கேசவன் "பரிமளா! எது எவ்வித மிருப்பினும் சரி! உனக்கு ஒரு விதமான தீங்கும் நேரா வண்ணம் காப்பாற்றுவதே என் கடமை என நான் நினைக்கிறேன். ஆதலால் அது விஷயத்தில் நான் இங்கு வராது நிற்பதே நலம், கடவுளின் இஷ்டம் போலத்தான் யாவும் நடக்கும். அவன் திருவுள்ளம் நாம் பிரிய வேண்டியதுதான் என்று ஏற்பட்டதால் நாடகத்திலிருந்து நம்மைப் பிரித்து விட்டார். ஆகையினால் இது பற்றி வருத்தப்படாதே! நான் இனி இங்கு அடிக்கடி வராது விலகிக் கொள்கிறேன். வருந்தாதே பரிமளா!" என்றான்.
பரிமளா:-ஐயோ ! வருந்தாது சந்தோஷமாக இருப்பதற்கு இந்தக் கடிதம் வரவில்லையே! இது ஆளைக் கொலை செய்வதற்காக வந்த எமனோலையே யாகும் என்றே என் மனத்தில் படுகின்றது. நான் என்ன விதமாகத் தேறுதலை யடைவேன்? நண்பரே! இக் கடிதத்தையும் நமது எஜமானரிடத்தில் காட்டி விடுதல் நலமென்று எனக்குத் தோன்றுகின்றது. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
கேசவன் :- நானும் அதைத்தான் தீர்மானித்துள்ளேன். முதலில் உன்னிடம் காட்டிவிட்டுப் போகவே வந்தேன், நீ கவலைப் படாதே! நான் இக் கடிதத்தை எடுத்துக் கொண்டுபோய் அவரிடம் காட்டித் தகவல் தெரிந்து கொண்டு மேற்கொண்டு என்ன செய்யலாம் என்பதைக் கவனிக்கலாம். பரிமளா! ஏன் கண்ணீர் பெருக்குகின்றாய்? வேண்டாம்! நாம் நாடக உறவு கொண்டோம்; அந்நடிப்பு முடிவுற்றது என்று மனந்தேறவேண்டும். விசனித்தலால் பயன் உண்டா!" என்று கூறிச் சமாதானம் செய்துவிட்டுக் கடிதத்துடன் கிளம்பி பொன்னுசாமியின் வீட்டை யடைந்தான்.
பொன்னுசாமிக்கு கேசவனின் வருகை எப்போதும் சர்வ சாதாரணமாகையினால் அவன் அதைப்பற்றி வியப்புறவில்லை எனினும் கேசவனின் முகம் மாறுபட்டிருப்பதைக் கண்டு “கேசவா! என்ன ஒருவாறாக இருக்கிறாய்! விஷயமென்ன்?" என்று கேட்டார். கேசவன்