கிடந்தார்கள். துப்பாக்கிகளும் அப்படியே. உள்ளே பிரம்மாண்டமான கட்டிடம். சரோசாவுக்கு மகிழ்ச்சி. ஏழை பாழைகளை கூண்டில் அடைச்சுப் பார்க்கிற போலீஸை இப்போது கூண்டுக்குள்ளேயே பார்ப்பதில் ஒரு அகரத் திருப்தி. அவர்கள் ஏதாவது தன்னிடத்தில் கேட்பார்கள் என்றபடி நின்றாள். தீவிரவாதிகளின் தாக்குதலை முறியடிப்பதற்காக ஏ.கே. 47 எதுவுமில்லாமல் உள்ளே கிடந்த அந்த போலீஸ்காரர்கள், அவளை கண்டுக்கவில்லை. அந்த அலுவலக செக்யூரிட்டி ஆபீசர் ஒரு சிவிலியன். இவர்களுக்கும், அவருக்கும் ஒரு உள்நாட்டு யுத்தம். யாராவது போகட்டும். அந்த குள்ளப்பையன் செக்யூரிட்டி மாட்டிக்கட்டும். இப்படிப்பட்ட ஒரு நல்லெண்ணம்.
சரோசா, அந்த பிரம்மாண்டமான கட்டிடத்தை நோக்கி நடைவேகத்தை அதிகப் படுத்தினாள். மணி பதினொன்றுக்கு மேலாகிவிட்டது. பத்துமணிக்கு முன்பே வரத்தான் நினைத்தாள். ஆனால், ருக்குமணிதான், ராவுகாலம், எமகண்டம் என்று இழுத்தடித்து விட்டாள். சரோசா, வேகவேகமாக அந்த அலுவலகப் உள்வாசலை நோக்கி கால்வீசி, கைநீட்டி நடந்தபோது, அவள் முன்னால் ஒரு உருவம் வந்து நின்றது. வாட்டசாட்டமான நாற்பது. உச்சி வழுக்கை; காக்கி யூனிபார்ம், தோளில் முளைத்த வட்டவட்டமான சங்கிலிச்சுருள் மாதிரியான துணிக்கயிறு அவரது பைக்குள் போய் முடிந்தது. அவளைப் பார்த்து பயபக்தியோடு கேட்டார்:
"மேடம், நீங்க யாரைப் பார்கணும்? நான் ஏதாவது உங்களுக்கு உதவி செய்யலாமா? சொல்லுங்க மேடம்."
சரோசாவுக்கு அந்த வார்த்தையின் அர்த்தம் புரியவில்லை. ஆனாலும், அந்த மேடத்திற்கு உரிய கம்பீரத்தோடு அவரைப் பார்த்தாள். இப்படியொரு ஆம்பளை இதுநாள் வரைக்கும் இப்படியொரு மரியாதை கொடுத்ததில்லை. 'யோவ், அண்ணாத்தே... இரு இரு...' சரோசா காக்கியை நெருங்கி முழங்கையை நீட்டினாள். அவர் மோவாய் இடிபடும் இடைவெளியில் நின்றுகொண்டு, கம்பீரத் தன்னம்பிக்கை யோடு. அதே சமயம் அப்பாவித்தனமாக விவரம் சொன்னாள் :
"எனிக்கி இந்த ஆபீசுல வேல போடுறாங்க சாரே, கேசுவலையோ, கொசுவலையோ, ஏதாவதொரு வேல. இளங்கோ சார் வரச் சொன்னார்."
அவள் பேச்சைக் கேட்டதும், மலர்ந்த முகத்தை உலறவைத்த காக்கிக்காரர் அருகே, இரண்டு