வெளிப்பகுதியில் - அல்லி அரசாணி மண்டபம் மாதிரியிருந்த உயரமான அறையிலிருந்த ஒருவன் கர்ஜித்தான். இடமும், உயரமும், அந்தஸ்தும் அந்த விசிலைவிட அதிகம்.
"யோவ்! நான் ஒருத்தன் செக்யூரிட்டி ஆபீஸர் நிக்கேன்ல... நீயே குறுக்கே புகுந்தால் அப்புறம் நான் எதுக்கு? அந்தப் பொண்ண இங்க அனுப்பு.'
விசிலடிச்சான், வேறு வழியில்லாமல் சரோசாவுக்கு வழிவிட்டார்.நாளைக்கி மாட்டிக் கொள்ளாமலா போவாள் என்று மனதிற்குள்ளேயே அவளைப் பகையாளியாக்கிப் பார்த்தார். இதற்குள் சரோசா மேல்நாக்கிப் பார்த்த கண்களை, அந்தக் கட்டிடத்தை நோக்கி கீழ்நோக்கிப் பார்த்தபடியே மேலே மேலே போனாள். செக்யூரிட்டி ஆபீஸர், அவளிடம் பேசுவது தனது தகுதிக்குக் குறைவு என நினைத்து, ரிசப்ஷன் ஆபீசரிடம் பேசு என்பது மாதிரி சைகை செய்துவிட்டுப் போய்விட்டார். உடனே அவள் அந்த ரிசப்ஷன் இருக்கைக்கு ஓடப்போனபோது, அங்கே மேஜையைவிட உயரமான நாற்காலியில் உட்கார்ந்திருந்த ஒரு நடுத்தரப் பெண், தான் ஊமை என்பது போல் அவளை அங்கே உட்காரும்படி கையால் தடுத்தது.
அந்த விசாலமான மொசைக் தரையில் வரவேற்பு வளைவு மேஜையிலிருந்து சிறிது தொலைவில் நீளவாக்கிலான இரும்புக் கிராதிகளில் வரிசைவரிசையாக பிளாஸ்டிக் நாற்காலிகள் பொருத்தப் பட்டிருந்தன. கிட்டத்தட்ட வகுப்பறை மாதிரி அது தோற்றம் காட்டியது. அப்போது அந்த அறையை இரண்டு பெண்கள்... பெருக்கிக் கொண்டிருந்தார்கள். இப்போது பதினொரு மணிக்குப் பெருக்குவதால் அவர்கள் காலையில் பெருக்கியதை மீண்டும் பெருக்குகிறார்கள் என்று நினைக்கவேண்டாம். சர்க்கார் பெண்கள் பதினொரு மணிக்குப் பெருக்குவதே பெரிய விஷயம். அவர்கள் துடைப்பங்களை தரையில் ஏவிவிட்டபோது, அங்கே அமர்ந்திருந்த பத்துப் பதினைந்து பேர்கள் எழுந்து நின்றார்கள். கைக்குட்டைகளால் முகத்தை மறைத்துக் கொண்டார்கள். ஆனால், சரோசா மட்டும் இரண்டு முட்டிக் கால்களையும் நாற்காலி முனையில் வைத்துக் கொண்டு அங்கேயே உட்கார்ந்திருந்தாள். வரவேற்புக் குமரிக்கிழவி அதைக் கவனிக்கத் தவறவில்லை.
இந்தச் சமயத்தில் ஒரு மீசைக்காரன் அந்தப் பக்கமாக வந்தான். கன்னங்களோடு நீண்ட மீசை, முப்பது வயதிருக்கும். முகம் கிழடுதட்டியது. அங்கேயிருந்த பெண்களை ஓநாய், ஆட்டைப் பார்ப்பது போல பார்த்தான். பிறகு சரோசா இருந்த நாற்காலிக்கு அடுத்த நாற்காலியை