எந்தக் காரணத்தைக் கொண்டும், துரை அண்ணன் சம்சாரம் அண்ணாத்தைக்கிட்ட சொன்னாப்பல, கோள் சொல்லக்கூடாது. அப்படிச் சொல்றது, 'நீ இருந்தும் நடக்குது பாரு' என்கிற அர்த்தமா ஆயிடும்.
இருவரும், கண்ணாடிக் கதவுகளைத் தாண்டி மெயின்ரோட அளவுக்கான அகலமான பாதையில் நடந்தார்கள். இருபுறமும் பெரிய பெரிய அறைகள், ஒவ்வொரு அறையிலும் மத்தியிலோ அல்லது ஒரு ஓரத்திலோ ஒரு கிருதாமீசை, வஸ்தாது நாற்காலி. மற்ற மேஜை நாற்காலி வகையறாக்கள் 'மற்றும் பலர்' மாதிரி. அத்தனை அறைகளிலும் ஆண்களும், பெண்களுமாய் மொய்த்துக் கொண்டிருந்தார்கள். ஒரே சந்தைச் சத்தம். டெலிபோன் முணுமுணுப்பு, வானொலியின் கிரிக்கெட் வர்ணனை. ‘டப்பு டப்பு' டைப்ரைட்டரின் சத்தம், 'டொக்கு டொக்கு' மின்விசிறிச் சத்தம். சரோசாவுக்கு ஒரு சின்ன ஆசை. ‘அதோ சொரசொரப்பான கம்பளத்துமேலே கீற நாற்காலி நல்லாத்தான் கீது. நாயினாவ ஒரு நாளக்கிக் கூட்டிவந்து அதோ அந்த மெத்த நாற்காலியில குந்தவைக்கணும். நாயினா... நாயினா... பாரு நாயினா, ஒன் பேத்தி மனுஷியாயிட்டா.'
இளங்கோ இடதுபக்கமாக இருந்த ஒரு அறைக்குள நுழைந்தான். இரண்டு கூறுகளான கதவுகள் திறந்தபடியே இருந்தன. உள்ளே நுழைந்தவன், வெளியே லேசாய் தயங்கி நின்றவளை லேசாய் தலையாட்டிக் கூப்பிட்டான். அவள் மெல்ல நடந்து உள்ளே வந்தாள். அந்த அறையை ஒட்டுமொத்தமாகப் பார்த்தாள். நீளவாக்கிலான செவ்வக அறை. அறுபதுக்கு முப்பது. கிழக்குப் பக்கம் ஓரமாக பிளைவுட் தடுப்புகளைக் கொண்ட ஒரு சின்ன அறை. இருபதுக்கு இருபது. அந்த அறையை மூடிய கதவு. வெளியே வடக்குப் பக்கம் நடுவில் பெரிய மேஜை. அதில் கழுத்தை சாய்த்துக் கொள்ளும் அளவிற்கான நாற்காலி. அந்த இருக்கைக்கு முன்னால் இருபுறமும் ஐந்தாறு இரும்பு நாற்காலிகள். சன்மைக்கா மேஜைகள். தெற்கு முனையில் ஒரு பாடாவதி மேஜை. அதன் மேல் பைல்கள், மைக்கூடுகள், ரப்பர் ஸ்டாம்புகள்... ஒரு வீராப்பான பேர்வழி.
நடு நாற்காலியில் உட்கார்ந்திருந்தவர் சரோசாவை ஓரங்கட்டிப் பார்த்தபடியே, இளங்கோவைப் பார்க்காமலேயே "உடம்பு சரியாயிட்டா" என்றார். அவனும் அவசர அவசரமாய் ஆமாம் போட்டுவிட்டுச் சொல்ல வேண்டியதைச் சொன்னான். "நீங்க என்னப் பார்க்க வந்தப்போ சொன்னேனே... கஷ்டப்படுற பொண்ணு... அது இதுதான்."