"சரோசாங்க, அய்யா!"
"காலையில ஒன்பது மணிக்கே, வந்து, டூட்டி ஆபீசருக்கிட்ட சாவி வாங்கி இந்த செக்க்ஷன் திறக்கணும். என் ரூம நல்லாத் தொடைக்கணும். இந்த ஜாடிய வெளியில கொண்டுபோயி கூலர்ல தண்ணி பிடிச்சு வைக்கணும். நான் வர்றதுவரைக்கும் வாசலிலேயே நிக்கணும். நான் வர்றதப் பார்த்தும் கதவத் தொறக்கணும். சூட்கேச சுமக்கணும். ஒரு நாளைக்கி பத்துப் பதினைந்து தடவ கேண்டீனுக்குப் போக வேண்டியிருக்கும். அலைச்சலுக்கு அலுக்கப்படாது. நாலு வருஷம் இப்படித் தள்ளிட்டியானால், அப்புறம் அதோ வெளியில உட்கார்ந்திருக்கானே அப்துல்லா, அவன மாதிரி காலுமேல காலு போட்டு வேல பார்க்காமயே சம்பளம் வாங்கலாம். நான் சொல்றது புரியுதா?"
"புரியுதுங்க அய்யா! அய்யா காலால் இட்ட வேலையை கையால...
"சினிமா அதிகமா பார்ப்ப போலுக்கு. இளங்கோ முகத்துக்காக இப்போ ஒன்ன சேர்க்கிறேன். அப்புறம் ஒன்ன இங்க வைக்கிறதும், வைக்காததும் உன் திறமையையும், விசுவாசத்தையும் பொறுத்திருக்கு."
"சார், ஹெட் கிளார்க் கிட்ட ஒரு வார்த்த..."
"இண்டர்காமில் சொல்லிடறேன். இந்தப் பொண்ணு முன்னால அவருக்கு உத்தரவு போடக்கூடாது பாரு."
"சாரி சார், வாறேன் சார்."
சரோசாவும், இளங்கோவும் வெளியே வந்தார்கள். அப்போது பார்த்து இண்டர்காம் குமிழை கீழேவைத்த தலைமை கிளார்க் ராமசாமி, இளங்கோவைப் பார்த்து தலை ஆட்டினார். இளங்கோவும் கடிகாரத்தைப் பார்த்துவிட்டு லேசாய் திடுக்கிட்டவன் போல், தோளைக் குலுக்கிவிட்டுப் புறப்படப் போனான். சரோசாவும் அவன் பின்னால் புறப்படப் போனபோது, அவன் அவளுக்குச் சொல்வது போல எல்லோருக்கும் சொன்னான்: