“நான் மாடியில இன்னொரு செக்ஷனில இருக்கேன். இந்த செக்ஷன்தான் உனக்கு எல்லாம். யார் சொல்லையும் தட்டப்படாது. என்ன வேல கொடுத்தாலும் செய்யணும்.”
சரோசா தலையாட்டினாள்.
இளங்கோ அங்கே இருந்தவர்களிடம் லேசாய் அரட்டை அடித்து விட்டுப் போய்விட்டான். தனித்துவிடப்பட்ட சரோசா, அங்குமிங்குமாய், மலங்கமலங்கப் பார்த்தாள். டைப்பிஸ்ட் கனகா, அவளை ஏறிட்டுப் பார்த்தாள். 'உடம்பு இருக்கு பார் இரும்புமாதிரி. நானும் இருக்கேனே, தயிர்ச்சாதம்.' அக்கவுண்டண்ட் ராமசாமி அவளை அண்ணாந்து கோபமாகப் பார்த்தான். 'என்னோட வேலைக்காரிய கேஷ்வலா வைக்கலாம்னு இருந்தால். இளங்கோ முந்திக்கிட்டாரே. பார்க்கலாம், பார்க்கலாம். இந்த முண்டக்கண்ணிய விரட்டணும்.' எல்லோரையும் விட, தெற்குப்புற மேஜையில் குரங்கு மாதிரி கால்களைத் தூக்கிவைத்துக் கொண்டு மேஜையையே மரமாகப் பாவித்து உட்கார்ந்திருந்த பியூன் அப்துல்லா பொறிந்தான். ஒல்லி உடம்பன், முப்பதைத் தாண்டாதவன்.
“நான் ஒருத்தன் இருக்கப்போ, எதுக்கு கேஷ்வல்?"
"டீ வாங்கிக் கொடுக்கறது ஒன் வேலையில்லங்கற. மேஜையைத் தொடைக்கறது ஒன் வேலையில்லங்கறே. ஒரு டம்ளர் தண்ணி குடிக்கறதுக்கே மூச்சு வாங்க வைக்கிற. இந்த வேலையைச் செய்யறதுக்கு ஒரு ஆள் வேண்டாமா?"
"எனக்கு ஓட்டி கேட்டா இல்லைன்னு சொல்றீங்க. அதுக்குக் காரணம் கேட்டா, அரசாங்கம் சிக்கனமா இருக்கச்சொல்லி சர்க்குலர் போட்டதாச் சொல்றீங்க. ஆனா இந்த மாதிரி சாவுகிராக்கிங்கள, கேஷ்வலா போட்டு பணத்த விரயம் பண்றீங்க."
தலைமை கிளார்க்கோடு மோதிய அப்துல்லா இப்போது சரோசா மீது பாய்ந்தான்.
“இந்தாம்மா ஒன்னத்தான், பெரிய சினிமா ஸ்டார்மாதிரி ஏன் போஸ் கொடுக்கிறே? என்னோட இந்த எச்சில் கிளாச கழுவிக் கிட்டுவா."