"ஓகே ஓகே நீ சொன்னால் நான் தட்டுவேனா? எதுக்கும் டெப்டி டைரக்டர் கிட்டயும் சொல்லிடு."
"காலையிலேயே சொல்லிட்டேன். ஓகே சொல்லிட்டார்." "எலக்ஷன் நம்பி பணத்தப் போடாதே, எலக்ட்ரிசிட்டிய நம்பி இலையப் போடாதே ஆபீசர நம்பி ஆமாம் போடாதே... எதுக்கும் அவரே என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லட்டும்.”
தலைமை கிளார்க் சொல்வது கொஞ்சம் அதிகப்படியாக, இளங்கோவிற்குத் தோன்றியது. ஆனாலும் அங்கிருந்த ஊழியர்கள் அனைவரையும் அடையாளம் தெரிந்தவர்கள் போல் பார்த்துக் கொண்டு ஆபீசர் கதவைத் தள்ளினான். அந்தக் கதவு அவனை உள்வாங்கிக் கொண்டு, மீண்டும் தானாய் மூடப்போனபோது, இளங்கோ அதைப் பிடித்துக் கொண்டான். சரோசாவும், தயங்கித் தயங்கி உள்ளே போனாள். உடனே அந்த ஸ்பிரிங் கதவு அலிபாபா குகைக் கதவு மாதிரி மூடிக் கொண்டது. உள்ளே போன சரோசா, முதுகை நிமிர்த்தினாள். இன்னா ஜில்லுன்னுக்கீது. அண்ணாத்த வீட்டுக்குப் போனப்போ குளிர் அடிச்சாப்புல இருந்துதே, அதேபோல ஜிலுஜிலுப்பாக கீது. அட தரையப் பாரேன், நடந்தா காலு உள்வாங்குது. காலுக்கு செருப்பே வாணாம் போல.
தலைக்கு மேல் நீண்ட ரப்பர் மெத்தை நாற்காலியின் பின்பக்கம் பிடரியில் கை போடுவதுபோல் போட்டுக்கொண்டு ஏதோ ஒரு பைலை குடைந்து கொண்டிருந்த டெப்டி டைரக்டர். அருணாசலம், கடாமுடா சத்தம் கேட்டு நிமிர்ந்தார். வயது, உடம்பு, நிறம் ஆகிய மூன்றிலும் நடுத்தரம். அடித்தொண்டையில் பேசக்கூடியவர்.
“உடம்பு இப்போ எப்படி இருக்குதப்பா?"
"ஒங்க ஆசீர்வாதத்துல சரியாயிட்டு சார்."
'அப்புறம் நான் சொன்னேன் பாருங்கோ கேஷ்வல் பொண்ணு. அது இந்தப் பொண்ணுதான் சார். பாவம், தள்ளாத அப்பாவ காப்பாத்துறதுக்கு அல்லாடுது."
“அப்படியா! ஒன் பேரு என்னம்மா?"