மீசைக்காரனை மதுரை வீரனாகப் பார்த்துக் கொண்டு அவன் பக்கமாகப் போனார்கள். சரோசா மட்டும் வீறாப்பாக நின்றாள். மீசைக்காரன் மற்றவர்களை மிரட்டினான். "போங்க... போங்க... அந்தப் பக்கமாகப் போங்க... டைரக்டர் வர்ற நேரம், நான் கூப்பிடுவேன், எனக்கு எப்பக் கூப்பிடணுமுன்னு தெரியும்."
சரோசா, ஒன்றைப் புரிந்து கொண்டாள். இவனுக்கு விட்டுக்கொடுக்க வில்லையானால், உள்ளே விடமாட்டான். அடக்கண்றாவியே, சர்க்கார் ஆபீசுலயா இந்தக் கூத்து... சாராயக் கடையில இல்லாத கூத்து. பேமானிப் பயலுக. பேசாமப்பூடலாம். நாளிக்கி இளங்கோவோடயே வரலாம். அய்யய்யோ! அதுக்குள்ளே வேல ஆருக்கும் பூட்டா? போனாப் போகட்டும். வெளியிலயே இப்படின்னா உள்ள எப்படியோ? சாட்சிக் காரனைவிட சண்டைக்காரனே தேவல. பேசாம, அண்ணாத்தக்கிட்டயே சரண்டராயிடலாம். சின்னவீடுதான் கோள் மூட்டியிருப்பாள். காலுல விழுந்தா தூக்கிவிடுவாரு.
சரோசா, வாசலுக்கு வெளியே போவதும், உள்ளே வருவருமாக இருந்தாள். அந்தச் சமயத்தில் உள்ளேயிருந்து வெளியே வந்த ஒருத்தியிடம் “இளங்கோ சார் இருக்காரா?" என்று கேட்டாள். அவள் பக்கத்தில் இருப்பதாலேயே, தான் பெரிய ஆள் என்று நினைத்துக் கொண்ட அந்தப் பெண் ஊழியை, அவளிடம் அலட்சியமாக ஏதோ சொல்லப்போனாள். இதற்குள் எவனோ ஒருவன் அவளோடு சோடி சேர்ந்துவிட்டான். சரோசாவுக்குப் பதிலளிக்காமலேயே அவளும் அவனோடு போய்விட்டாள். அந்தச் சமயம் பார்த்து உள்ளே வந்த, ஒரு வெத்தலைப் பாக்கு ஆசாமியிடம் கேட்டாலோ, அவர் மீசைக்காரனிடம் கை காட்டினார். பேசாம மீசை சோமாரியை தாடையில ஒண்ணு போடலாமா...?
சரோசாவின் உள்வாங்கிய கண்கள் திடீரென்று இமைகளைத் தூக்கியபடி வெளிப் பட்டன. ஒடுங்கிய உதடுகள் பிரிந்தன. கன்னத்தில் குவிந்த கைகள் நீண்டன. இளங்கோ சார்... அதோ அந்த மீசைக்காரனுக்குப் பக்கத்திலேயே, நீலக்கலர்பேண்ட், அதுக்குள்ளே டக்கு வெச்ச சட்ட. சும்மா சொல்லக்கூடாது, பிள்ளாண்டான் நல்லாத்தான் கீறாரு. மீச மட்டும் வச்சாருன்னா குயந்த முகம் மாதிரி தோணாது.
சரோசா, துள்ளிக்குதித்து இளங்கோவின் முன்னால் போய் நின்றாள். மீசைக்காரனிடம் பேசிக்கொண்டிருந்த அவனது கவனத்தைக் கவர்வதற்காக இருமிக்காட்டினாள். அப்படியும் அவன் திரும்பாததால், அவன் முழங்கையில் லேசாய் ஒரு தட்டுத் தட்டியபடியே "சாரே...