மூன்று பெண்கள் உள்ளே வந்தார்கள். ஒருத்தி கால்முட்டிகளைக் காட்டிக் கொண்டிருக்கும் ஸ்கர்ட்காரி. இந்த லட்சணத்தில் அதுவும் இடையிடையே கத்தரிக்கப்பட்டு இருந்து. மற்றொருத்தி கையில்லாத ஜாக்கெட் காரி. பொம்பளை உடம்பு, ஆம்பளை முகம். இன்னொருத்தி ஆம்பளை உடம்பு, பொம்பளை முகம். ஆனாலும் அவர்கள் ஹாண்ட்பாக்குகளை ஆட்டியவிதத்தில், காக்கிக்காரர் அவர்களிடம் பணிவன்பாக நின்றார். இதற்குள் சரோசா தன்பாட்டுக்கு நடந்துகொண்டிருந்தாள். அப்போது ஒரு விசில் சத்தம். முதலில் விட்டுவிட்டும், அப்புறம் விடாமலும் ஒலித்தது. அவள் யாருக்கோ, எதுக்கோ என்பது மாதிரி நடந்தபோது, "ஏய்... ஏய்... கேசுவலு, ஒன்னத்தான், - உய்ங்... உய்ய்” என்ற குரலும், குரலுக்குரிய விசிலடிச் சத்தமும் கேட்டன.
சரோசா, நடந்தபடியே முகத்தைத் திருப்பினாள். அவளுடன் இரண்டு நிமிடத்திற்கு முன்பு எந்த வாய் பணிவாகப் பேசியதோ, அந்த வாயே இப்போது அவளை 'வா... வா... என்று கையை ஆட்டி அட்டகாசமாய் கூப்பிட்டது. விசிலடித்தபடியே கூப்பிட்டது. குப்பத்தில் கூட இப்படி விசிலடிச்சி பொம்மனாட்டிய கூப்பிடமாட்டாங்களே... சரோசா ரிவர்சில் நடந்து, அந்த ஆசாமி முன்னால், முகச்சுருக்கங்களோடு நின்றபோது அவர் விசிலை எடுத்துவிட்டு அவளை வீசிக் கடாசினார்.
“ஏய், என்ன நினைச்சிக்கிட்டே? தொறந்த வீட்டுல ஏதோ நுழையுறதுமாதிரி நுழையுறே... நான் ஒருத்தன் இங்க நிற்கிறேனே, என் பெர்மிஷன் இல்லாம எப்படி நீ உள்ளே போகலாம்? 'ஒங்கள இல்ல மேடம், நீங்க போங்கோ. இந்தப் பொண்ணத்தான், "உங்களச் சொல்வேனா?' இந்தாம்மா! மொதல்ல வெளியில போ”
சரோசா, மன்றாடினாள்.
“அண்ணாத்தே, தப்பா நினைக்கப்பிடாது அண்ணாத்தே. ஒரு வேல கொடுக்கிறதா இளங்கோ சார் சொன்னாரு, நானும் ஆபீஸ்கீபீஸ் போனதில்லே. தப்பா நடந்திருந்தா மன்னிச்சுக்கோ”
"ஆங்... அப்படி வா வழிக்கி. ஆபீசுன்னா ஒரு முறை இருக்குது ஆனாலும் இப்போ நீ வெளியில நிக்கணும். நான் இளங்கோவ பார்த்துட்டு ஒன்கிட்ட சொல்றேன்.”
சரோசா என்ன செய்யலாம் என்று திக்கிமுக்கித் திணறிய போத அந்தக் கட்டிடத்தின்