சொல்லாமே... கீறாள்... இவள்லாம் அண்ணாத்தேகிட்ட சிக்கணும், அப்போ தெரியும் சேதி.'
இவளின் துடிப்போ, அல்லது பதைப்போ புரியாத அந்தக் குமரிக்கிழவி கத்தினாள் :
"இந்தா பாரு. என் மூட அவுட்டாக்காதே. எனக்கு ஒன்னய எப்போ கூப்பிடணுமுன்னு தெரியும். அப்புறம், யோவ் மீசை, இன்னிக்கி அந்த பார்ட்டி இருக்குதா?"
சரோசா, ஆமை போல் ஐம்பொறிகளையும் அடக்கி அந்த நாற்காலியில் மீண்டும் உட்கார்ந்தாள். ஒருமணி நேரம், ஒன்றரை, இரண்டு. மீண்டும் அவள் அங்கே போனபோது வரவேற்புக்காரி டம்பப் பையோடும், மீசைக்காரனோடும் வெளியேறினாள். இப்போது ஒரு ஆம்பளை கிழடு உட்கார்ந்தது. சரோசா அவர் முன்னால் ஓடிப்போய் நின்றாள். "இளங்கோ சாரு.. இளங்கோ சாரு..." என்றாள். அவர் கத்தினார் : "வந்ததும், வராததுமாய் என்னம்மா இது? என்றார். சரோசா கலங்கிபோனாள். அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாப் போச்சே...!
சரோசா வந்த வேளை என்ன வேளையோ? அலுவலாக இடைவேளை வந்துவிட்டது.
அந்த வரவேற்புக் கிழடு, ஆற அமர உட்காரட்டும் என்பதுபோல் அவள் பல்லைக் கடித்துக் கொண்டே நின்றாள். அதுவோ கையோடு கொண்டுவந்த டிபன் பாக்ஸை மேஜையில் போட்டுத் திறந்தது. எலுமிச்சப்பழ சாதம், எண்ணெய்கத்திரிக்காய். அந்த வரவேற்பு வட்ட மேஜையிலேயே கரங்களை கால்கள் மாதிரி நீட்டிக்கொண்டது. கிடைக்காத தீனி கிடைத்துவிட்டால், ஒரு நாய், இரண்டு கால்களையும் முன்னால் நீட்டிக்கொண்டு அதற்கு மத்தியில் உள்ள இரையை தலையை சாய்த்துச் சாய்த்துத் தின்னுமே அப்படி.
இந்தச் சமயம் பார்த்து மீசைக்காரன் அங்கு வந்தான். கிழடுக்கு தண்ணீர் பிடித்து வைத்துவிட்டு, அவளை நோட்டமிட்டான், இப்பவாவது என் அருமை புரிஞ்சுதா என்பது மாதிரி. இதற்குள் மீசைக்காரன் அந்தக் கிழட்டைப் பார்த்து "வி.ஐ.பி. ரூம்ல போய் சாப்பிட்டுட்டு வழக்கம்போலத் தூங்குங்க சார்; ரிசப்ஷனை நான் பார்த்துக்கிறேன்” என்றான். கிழடு அவனை விருப்போடும், சரோசாவை வெறுப்போடும் பார்த்துக் கொண்டது. பிறகு சாப்பிட்டு முடித்துவிட்டு வி.ஐ.பி. ரூமிற்குள் படுக்கப் போய்விட்டது. மீசைக்காரன் அவரது நாற்காலியில் ஏறிக்கொண்டான். சரோசாவைப் போலவே ஒருசில தலை காய்ந்த பெண்களும், ஆண்களும்