பண்ணுறாள். குட்சய காலி பண்ணச் சொல்லிருக்குவ நச்சரிக்கிறாள். ஆமாம், எம்மாம் சம்பளம் தேறும்? ஒரு நாளைக்கி 34 ரூபா நாற்பது பைசா. லீவு நாளு இல்லாம 24 நாளு வேல பார்த்திருக்கேன். நாற்பது பைசா... கஸ்மாலம் விட்டுத்தள்ளு. இருபத்தி நாலு நாளுல முப்பத்திநாலு ரூபா எம்மாம் தொகை? கோவிந்துகிட்ட கணக்குக் கேட்டா ஒரு புல் பாட்டிலே கேப்பான். அடடே, இந்தக் கணக்கு கூட எனக்குத் தெரியலியே.
சரோசா, முகத்தை துடைத்துக் கொண்டே, மோகன் அருகே போனாள். அவன் கேள்வி பாவனையோடு முகம் காட்டியபோது கேட்டாள்:
"சாரே, சாரே! இருபத்தி நாலு... முப்பத்தி நாலு எம்மாம் சாரே? அதாம சாரே, ஒரு நாளிக்கி முப்பத்தி நாலு ரூபா. அப்போ, இருபத்திநாலு நாளிக்கி? பிளீஸ் சாரே."
மோகன் மனதுக்குள் முனங்கினான். விரலை மடக்கினான். முடியாமல் போகவே கால்குலேட்டரை எடுத்துக் கணக்குப் போட்டான். “816 ரூபாய்... என்ன விஷயம்?”
"என்னோட சம்பளம் சாரே! இன்னிக்கி, நம்ம செக்ஷன்ல அல்லாருக்கும் ஸ்வீட் கொடுக்கப் போறேன். ஏதோ ஓங்க புண்ணியத்துல இப்பதான் லைப்புலயே முதல் தடவையா எட்டு நூறு ரூபா நோட்டுங்கள சொந்தமா பாக்கப் போறேன்.”
தலைமை கிளார்க் எட்வர்ட் பேனாவை உதறி உதறி வெள்ளை சுவரை கறுப்பாக்கியபோது, சரோசா ஓடிப்போய் அவரது பேனாவைப் பறித்தாள். அந்த ஒல்லிப் போனவில் தடித்த பாட்டிலை எடுத்து இங்க் ஊற்றினாள். டைப்ரைட்டரில் இருந்த தூசியை வனஜா ஊதிவிடுவதைப் பார்த்து விட்டு, அவள் அருகே ஓடிப்போய், டஸ்டர் துணியை எடுத்து அதைத் துடைத்து விட்டாள். வாய்க்கு வெளியே தெரிந்த பற்கள் உள்ளே போகவில்லை. 'சம்பளம் வாங்கினவுடனேயே இளங்கோ சாரப் பார்த்து அது பேசுதோ இல்லியோ, அது காலுல பணத்த வச்சி எடுக்கணும்'
‘ஆனானப்பட்ட அநியாயக்கார இன்ஸ்பெக்டரு கூட ஒப்புக்காவது ஒரு விசாரணை நடத்துறார். ஆனால் இந்த இளங்கோ சாரு, ஒரு சின்ன விசாரணை கூட நடத்திலேயே... பாவம் அவரு. பாமா காயப்போட்டதுல ஒலர்ந்து போயிட்டார். அடடே, காதலுக்கு இம்மாம் சக்தியா? பாவம் அவருக்கு கன்னங்கூட குழிவிழுந்துட்டு. பாமா, அவர திரும்பிக்கூடப் பார்க்கறது இல்லன்னு