தானாகச் சரியாகிவிடும் என்ற நப்பாசையுடன் இருந்த அஸிஸ்டெண்ட் டைரக்டர் அருணாசலம் இப்போது மெல்ல ஆமை மாதிரி கதவைத் திறந்து தலையை மட்டும் நீட்டினார். பிறகு, உடம்பு முழுவதையும் வெளிப்படுத்திக் கொண்டு அரண்டு போனதைக் காட்டிக்காமலே அதட்டினார் :
“என்ன சத்தம் இங்கே? என்ன ரகளை? சரோசா, முதல்ல கதவைத் திற.”
"உன்னோட சூட்கேஸை வாங்கிட்டு உனக்கி நல்லாத்தான் கதவைத் தெறந்து விட்டேன். ஆனர், இன்னிக்கு இப்படிநானு திறந்த கதவுக்கு பைசல் தெரியாமல் போனதால் அதை மூடிட்டேன். எனக்கு ஏன் சார் சம்பளம் கொடுக்கலை? அல்லா கேசுவலுங்களும் வாங்கறப்போ எனிக்கு ஏன் தரலை?”
டெப்டி டைரக்டர் எதுவும் தெரியாதவர்போல வாயும் வயிறும் மாறி மாறி ஆட தலைமைக் கிளார்க்கைக் கேட்டார்:
"இந்தப் பொண்ணுக்கு ஏன் சம்பளம் கொடுக்கலை? எட்வர்ட்... உங்களைத்தான், பதில் சொல்லுங்க.”
எட்வர்ட், அஸிஸ்டெண்ட்-டைரக்டரை,
தனது அஸிஸ்டெண்ட் போல் முறைத்துக்கொண்டு, அக்கம்பக்கத்தின் அங்கீகாரத்திற்காக அவர்களையும் பார்த்துக் கொண்டு பதிலளித்தார் : "காஷுவல்னு யாரையும் நியமிக்கப்படாதுன்னு போன வாரம் சர்க்குலர் வந்ததைக் காட்டினேனே... நீங்க அதைப் படித்ததுக்கு அடையாளமாய் கையெழுத்து வேற போட்டிருக்கீங்களே..."
அரசாங்கத்தின் சிக்கன நெறிகளை வகைப்படுத்தி பெரிய புராணம் போல் வந்த ஒரு கற்றைத்தாள்களை படிக்கச் சோம்பல்பட்டு, படித்தது போல் கையெழுத்துப் போட்ட அருணாசலம், இப்போது அரண்டு போனார். இந்தச் சமயத்தில் மோகன், சரோசாவுக்கு ஆதரவாக, இருந்த இடத்தில் இருந்தபடியே விவரம் சொன்னான் :
"அதே சமயம், அந்த சர்க்குலர்ல மேலிடத்தின் பெர்மிஷன் வாங்கி காஷுவல் லேபர்