போறதை செக் பண்ணாத கார்டு என்னை என்ன செய்துடுவான்னு பார்த்துடறேன்."
வனஜா அதிரிந்து போய் வாய்க்கு உதடுகளால் தாழிட்டு, அக்கௌண்டன்ட் ராமசாமியின் பின்னால் தன்னை மறைத்துக் கொண்டாள். அப்போது சிறிது சுதாரித்துக்கொண்ட தலைமை கிளார்க் அசட்டையாகப் பேசுவது போல் சட்டையெல்லாம் வேர்வையால் நனைய தட்டுத் தடுமாறிப் பேசினார்:
"இந்தா பாரும்மா, எது பேசணுமுன்னாலும் உள்ளே இருக்கிற ஆபீஸர்கிட்ட பேசு; உனக்கும் எங்களுக்கும் பேச்சு இல்லை."
"ஆபீஸரு மட்டுமாய்யா வேலை கொடுத்தார்? நீ கொடுக்கலை? தப்புத்தண்டா செய்யாத போதே என்னைத் திட்டலை? நான் வாங்கிக் கொடுத்த டீயையெல்லாம் குடிச்சியே, அது டீயா, இல்லாட்டி வேற எதுவுமா?"
தலைமை கிளார்க் வாயை அசூசையாக சப்புக் கொட்டியபோது, சரோசா மேலும் தொடர்ந்தாள்:
“ஏய்யா பெரிய மனுஷங்காளா... மனுஷிகளா! நான் சம்பளம் வாங்கப் போறேன்னு, ஒங்க கிட்ட சொன்னேன்னே, அப்போகாட்டி பில்லு போடலைன்னு சொன்னா ஒங்க வாயி அயிகிப் போயிடுமா? எந்த நாறிப்படையாவது வாய் தொறந்தீங்களாய்யா? உங்களுக்கு பிராண்டி வாங்கிக் கொடுக்காட்டி என்னைப் பிராண்டுவீங்க. அப்படித்தானே? யாரும் வெளியே போகக் கூடாது. எனக்குப் பதில் சொல்லாம யாரும் அப்பால இப்பால போகக் கூடாது; இல்லாட்டி கொலை நடக்கும்."
சரோசா, அந்த செக்ஷனின் அறைக் கதவைக் காலால் உதைத்துச் சாத்தினாள். அவளை எதிர்க்கும் திராணி கொண்ட அப்துல்லாவோ, துணிக்காரரிடம் ஒரு ஓரமாக டூயட் பேசிக் கொண்டிருந்தான். அனைவரும், அந்த புதிய சரோசாவைப் பார்த்து அதிர்ந்து போனார்கள். எதற்கும் கவலைப்படாதவன் போல், நடப்பதை ரசித்துக் கொண்டிருந்த கிளார்க் மோகன் மீது ஆபத்துக்குத் தோஷமில்லை என்பதுபோல், கனகா ஒட்டிக் கொண்டாள். வனஜாவோ, 'பி.ஏ' சுந்தரத்தின் பின்னால் போய் நின்று கொண்டாள். தலைமை கிளார்க்கின் பாண்ட், இடுப்புக்குக் கீழே நனைந்திருந்தது. வெளியே நடக்கும் விவகாரங்கள் நன்றாகப் புரிந்தாலும், அவை