போல் எழுந்ததால், அவள் ஒரு முக்காலியில் உட்கார்ந்தாள். 'அவங்க இல்லாதப்போ பொறுப்பான, நானும் போயிட்டா எப்படி? ஏடி ஏன் போகல? அவர்கிட்டே ஏன்னு கேப்போமா? வேற ரோதனையே வேணாம். கழுதைக்குப் பின்னாடியும், ஆபீசருக்கு முன்னாடியும் காரணம் இல்லாமப் போகப்படாதுன்னு காஷ்வல் முனியம்மா சொல்லி இருக்காளே!
அரைமணி நேரத்தில், கந்தரேசனும் ராமசாமியும் அவர் இவரிடம் கடன் கேட்க, இவர் அவரிடம் கடன் கேட்க, கடனே என்று உள்ளே வந்தார்கள். இதற்குள் சரோசா சம்பளம் வாங்க எழுந்திருக்கப் போனாள். அதற்குள் கனகாவும், வனஜாவும் எழுந்தார்கள். "எனக்கு ஒருத்தர் போன் பண்ணுவார். அவரோட நம்பரை வாங்கி வச்சுக்கோ" என்று அந்த 'ஒருத்தருக்கு' ஒரு அழுத்தம் கொடுத்தபடியே கனகா முன்னால் நடக்க, வனஜா கண்ணடித்து பின்னால் சென்றாள்.
சரோசா விரல்களுக்கு சொடக்குப் போட்டபடியே உட்கார்ந்திருந்தாள். நாயினாவுக்கு ஒரு கம்பளி வாங்கோணும். நாளைக்கி புது குடிசையில் பால் காய்ச்சணும். இளங்கோ சார் அங்க வந்தால் எப்படி இருக்கும்? 'சாரே-சாரே- நீ இல்லாட்டி நான் இப்படி மனுஷியா ஆயிருக்க முடியாது சாரே. நீ அடிச்சாக்கூட பேசாம நின்னுக்குனே இருப்பேன் சாரே. ஒங்கம்மா தடிச்சி கூட தப்புத்தப்பு, ஒன்னோட மதரு திட்டுனாக்கூட பொறுத்துக்குவேன் சாரே.'
வனஜாவும் கனகாவும் செக்ஷனுக்குள் வந்தபோது, மணி நாலரை; சரோசா அவசர அவசரமாக எழுந்தாள். கனகா டெலிபோன் பற்றிக் கேட்டதை காதில் வாங்காததுபோல் ஓடினாள். பிறகு மனசாட்சி உறுத்த மீண்டும் அங்கே வந்து "ஆரும் போன் போடலம்மா” என்று சொல்லிவிட்டு, திரும்பி நடந்தாள். ஆமாம், எங்க சம்பளம் கொடுக்குறாங்கோ? அதோ வாறாளே முனியம்மா, நல்லவ... கூப்டலாம்.
சரோசா மீண்டும் உள்ளே வந்தாள். ஒரு வார்த்தை சொல்லாமப் போறது எவ்வளவு பெரிய தப்பு. ஆனாலும் எனக்கு இப்பிடி தெனாவுட்டு ஆகாதுப்பா. அவள் தலைமை கிளார்க்கின் முன்னால் நின்று தலையை சொறிந்தபடியே சொன்னாள் : "சம்பளம் வாங்கிட்டு வாறேன் சாரே. கொஞ்சம் லேட்டானாலும் போகாதீங்கோ... அல்லாருக்கும் ஸ்வீட் கொடுக்கப்போறேன். கேண்டீன்ல இனிப்புக்கும் மிச்சருக்கும் ஆர்டர் பண்ணிட்டேன்.''
தலைமை கிளார்க் எட்வர்ட், அவளை ஏறிட்டுப் பார்த்து, பிறகு ஏற்றிய தலையை இறக்கினார்.