ருக்கு வேற சொல்லுறாள். எல்லாம் என்னால. அப்படி நான் சொல்லாட்டி ருக்கு கோவிந்துக்கு, பொண்டாட்டியா தெரிந்திருக்காது. எதுக்கும் பாமாவப் பார்த்து விசயத்த எடுத்துச் சொல்லணும். தேவைப்பட்டா அவள் கன்னத்துல இரண்டு போடுபோட்டு, வலுக்கட்டாயமா கையப்பிடிச்சி இழுத்து, இளங்கோ சாரு முன்னால நிறுத்தணும். பாமா... கண்ணால பார்த்ததும் பொய், காதால் கேட்டதும் பொய்யும்மா... கண்ணு...!”
சரோசா, தலைமை கிளார்க் எட்வர்ட்டையும், அக்கவுண்டன்ட் ராமசாமியையும் பயபக்தியோடும், சிறிது அனுசரணையோடும் பார்த்தாள். இருபது நாளைக்கி முன்னால் அவர்கள் பிராந்தி வாங்கிக் கொண்டு வரச்சொன்னபோது முகத்தில் அடித்தாற்போல் முடியாது என்று சொல்லிவிட்டாள். அன்றிரவு நாயினாவிடமும், ருக்குவிடமும் நடந்ததைச் சொல்லப் போனாள். பிறகு, தனது சந்தோஷத்தையே தங்களது சந்தோஷமாகக் காணும் அவர்களது மகிழ்ச்சியை குலைக்க அவள் விரும்பவில்லை. மறுநாள் ஓலை கிழியப்போகிறது என்ற பீதியோடு அலுவலகம் போனாள். ஆனால், அவள் எதிர்பார்த்ததற்கு மாறாக தலைமை கிளார்க், அவளை முதல்தடவையாக ஒரு மனுஷி போல் பார்த்தார். அக்கவுண்டண்ட் ராமசாமி "ஏன் இப்படி அடிச்சுப்பிடிச்சு வாரே? ஈவினிங்கில லேட்டாய் போகிறவள், காலையில டைமுக்கு வரணும்னு அவசியமில்லே...” என்றார். அசிஸ்டென்ட் டைரக்டர் 'பி.ஏ.' சுந்தரம் கூட தனது நாற்காலியை தானே துடைத்துக் கொண்டு “சரோ பிளீஸ் காபி வாங்கி வறியா” என்று கெஞ்சுவது போல் கேட்டான். பீளிஸாமே? எப்பாடி, நல்லாத்தான் கீது!
அவளுக்கு அந்த பிளீஸ் என்ற வார்த்தைக்கு அர்த்தமே தெரியவில்லை என்றாலும், அது ஒரு மரியாதைக்குரிய வார்த்தை என்று மகிழ்ந்து போனாள். அடாவடி பியூன் அப்துல்லா கூட "பாவம் அது இப்போதானே வந்திருக்கு, நான் போயி வாங்கீட்டு வாறேன்” என்று சொன்னான். சரோசா, பழைய நினைவுகளில் இருந்து விடுபட்டு, சம்பளச் சிந்தனைக்குத் திரும்பினாள்.
மத்தியான வேளை வந்தது. பலர் படிகளில் ஏறிக் கொண்டும், இறங்கிக் கொண்டும் இருந்தார்கள். வயது பிரம்மச்சாரிகளின் சிரிப்புச் சத்தம், வால் அறுந்த நடுத்தரங்களின் நிசப்தம், டம்பப் பை பெண்கள். கைகளில் கவர்களைப் பிடித்தவர்கள், சைடுபாக்கெட் பெருத்தவர்கள், மாடிப் படிகளிலேயே பலருக்கு ஒவ்வொரு நோட்டாக உருவிக் கொடுப்பவர்கள், அனைவரையும் ரசித்துப் பார்த்த சரோசா, சம்பளம் வாங்குவதற்காகப் போகப் போனாள். அந்தச் சமயத்தில், சுந்தரேசனும், ராமசாமியும் தத்தம் லெதர் பைகளைத் தூக்கிக் கொண்டு ஒன்று