போய் நின்றாள்.
அந்த செக்ஷன்காரர்கள் அவளிடம் பிராந்தி பெற முடியாத காரணத்தால் அவளையே ஒரு போதைப் பொருளாக்கிவிட்ட உண்மை, இப்போது புலப்பட்டது. ரணகாயத்துக்கு ‘முதலுதவி' செய்தது போல் திடீரென்று ஒரு வைராக்கியம். அந்த மாடி சமதளத்தில் ஓடினாள். அப்போது தான் முனியம்மா ஞாபகம் வந்தது. அவள் அங்கே இல்லை. ஏதோ ஒரு அறைக்குள் இருந்து கொண்டு அவளைப் பார்த்து விட்டு முனியம்மா ஒளிவது தெரிந்தது. சரோசா கம்பீரமாகச் சொன்னாள் : "முனிக்கா... முனியம்மா... வெளியே வா முனியம்மா... ஒன்னண்ட கடன்கேட்க மாட்டேன் முனிக்கா..."
சரோசா, நான்கு நான்கு படிகளாய் தாவித்தாவி, இறங்கினாள். இன்றைக்கு என்ன ஆனாலும் சரி, இந்த எட்வர்ட் - ராமசாமியை இன்னான்னு பார்த்துடணும்.
சரோசா அந்த அலுவலகப் பிரிவிற்குள் பொறி கலங்கி நுழைந்தபோது, அங்கே இருந்தவர்கள் நிமிர்ந்தார்கள்; சிரிப்பும், கும்மாளமுமாய், சட்டைப் பைகளையும், ஜாக்கெட்டின் உட்புறத்தையும் பிடித்துக் கொண்டே, புறப்படப் போனார்கள்.
தலைமைக் கிளார்க் மட்டும், தலையைத் தடவியபடியே டெலிபோனில் பேசிக் கொண்டிருந்தார். 'ஐயையோ, ஆசாமி விடமாட்டேங்கானே' என்பது மாதிரி தலையில் லேசாக அடித்துக் கொண்டே, பேசினார்.
அக்கவுண்டன்ட் ராமசாமி எதையோ அதிகமாய் தின்று தீர்த்து விட்டு ஏப்பம் விட்டபடியே எழுந்தார். கள்ள உப்பலோடு, வனஜா, டைப்ரைட்டர் மேல் ஒரு பிளாஸ்டிக் துகிலை முக்காடு போட்டாள். அப்போது, வசூலுக்கு வந்த ஒரு புடவை வியாபாரி, ‘நரசிம்மாவதாரம்' மாதிரி வெளியேயும் நிற்காமல், உள்ளேயும் போகாமல் வாசலுக்கு வாய் உள்ள கதவு போல் நின்று கொண்டிருந்தார். அவருக்குப் பயந்து பியூன் அப்துல்லா தனது பெரிய மேஜைக்குள் ‘நெருப்புக் கோழி' மாதிரி தலையை மட்டும் மறைத்துக் கொண்டான்.
சரோசா, டெலிபோனில் பேசிக் கொண்டிருந்த எட்வர்ட் முன்னால் போய் நின்று அவர் முகத்தை நோக வைத்தபடி கத்தினாள்: