சரோசா, அந்தக் குரலைக் கேட்டவுடன் மகுடியால் மயங்கும் பாம்பு போல் மயங்கினாள். உடம்பை எதிர்ப்புறமாய் நிமிர்ந்து, ஒரே இழுப்பில் கதவுகளை இரண்டு கூறுகளாக்கியபோது, இளங்கோ முன்னாலும், முனியம்மா பின்னாலுமாய் நின்றார்கள். அவ்வளவுதான்... சரோசாவின் கோபம் அழுமையாகியது. அழுத்தம் அவலமானது. அக்னித் துண்டுகள் பனிக்கட்டிகளாயின. இளங்கோவின், இரண்டு கைகளையும் எடுத்து தன் தலையில் போட்டுக் கொண்டு, அரற்றினாள் :
"அல்லாப் பழக்கத்தையும் விட்டுட்டு மனுஷியானதா சந்தோஷப்பட்ட சமயத்துல என்னை இப்படிப் பண்ணிட்டாங்களே சாரே...நாயினாவை சாகற காலத்திலியாவது வாய வைக்கலாம்னு சந்தோசப்பட்டேன். அல்லாத்தையும் கெடுத்துட்டாங்களே சாரே... பழைய தோஸ்துங்க சிரிக்கும்படியா ஆயிட்டே சாரே... எனிக்கி சம்பளம் வாங்காததுகூட பெரிசில்ல... அது கெடைக்கப் போறது மாதிரி ஒரு பாவலா பண்ணி, அம்போன்னு விட்டுட்டாங்களே... அதைத்தான் என்னால தாங்கிக்க முடியல சாரே."
இதற்குள், அங்கேயும் இங்கேயுமாய் போய்க் கொண்டிருந்த ஊழியர்கள் அங்கே கூடிவிட்டார்கள். மேலே இருந்து டைரக்டர் வரும் நேரம். அவருக்கும் விஷயம் போய்விட்டால், தனக்கு வரவேண்டிய பிரமோஷன் வராமலே போய்விடும் என்று, ஏடிக்கு ஒரு உதறல். இந்தச் சமயத்தில் இளங்கோவே சரோசாபோல் பேசப் போனபோது, தலைமை கிளார்க் மெல்லிய குரலில் பேசினார் :
"இந்த நியூசென்சுக்குக் காரணமே இந்த இளங்கோதான். தராதரம் தெரியாதவங்களை- யெல்லாம் ஆபீசுல சேர்த்ததாலே ஆபீஸ் தரம்தான் போச்சு.”
இளங்கோ வெடித்தான் : "இந்தப் பொண்ணு நியூசென்ஸ் காரின்னா, நாமெல்லாம் அரசாங்கக் கேடிங்க. ஒரு மாசமா நாய் படாத பாடா உழைச்சிட்டு அதுக்குப் பலன் கிடைக்கலன்னு அவள் குலைக்கத்தான் செய்வாள். நாமா இருந்தால் கடிச்சிருப்போம். நம்ப வச்சு கழுத்தறுத்துட்டீங்களே! இந்தாம்மா சரோசா. ஏன் அழுவுறே? இந்தா, என் சம்பளம் முழுசும் ஒனக்கு வேலைக்குக் கூலியாயும், இவங்களோட அகம்பாவத்துக்கு அபராதமுமாவும் தாறேன்.”