மாளிகையைத் தேடி வந்து என்னைக் கெளரவப்படுத்திய ஸ்திரியை நான் அவமரியாதையாய் நடத்தினேனே ஆகா!
வஸ : (தனக்குள்) இது அவமரியாதையா இந்தப் பாக்கியம் யாருக்குக் கிடைக்கும்! இந்தப் பணிவிடை என்னுடைய ஆயுட் காலம் முழுதும் கிடைக்காதா? என்று நான் இராப் பகலாய் என் குலதெய்வத்தை வேண்டித் தவம் செய்கிறேனே!
ஸோமே : அவள் வேறு யாரும் இல்லை. நம்முடைய நகரத்திய எல்லா மடந்தையரிலும் அழகில் சிறந்தவள் என்று புகழப்படும் வஸந்தஸேனை என்னும் ஸ்திரீ ரத்னம். அவள் வேறு யார் மீதிலும் இச்சை கொள்ளாமல் தங்கள் நற்குணத்தைப் பற்றிக் கேள்விப்பட்டுத் தங்களையே அடைய வேண்டும் என்று காதல் கொண்டிருக்கிறாளாம்.
மாத : உண்மையில் வஸந்தஸேனையா வந்தவள். என்ன ஆச்சரியம்! அவள் என்னை விரும்பவாவது அவளுடைய செல்வ மென்ன! சிறப்பென்ன! கேவலம் தரித்திரனாகிய என்னை அவள் எதற்காக நாடப் போகிறாள். தவிர நான் ஏற்கெனவே ஒரு ஸ்திரீயை மணந்து கொண்டிருப்பவன் ஆயிற்றே! நான் பிரம்மசாரி அல்லவே! நீ சொல்வதில் ஏதோ பிசகிருக்கிறது!
ஸோமே : நான் சொன்னது உண்மையே! அதில் யாதொரு பிசகுமில்லை. இராஜாவின் மைத்துனன் தங்களுக்கு என் மூலமாய் ஒரு சங்கதி சொல்லி அனுப்பி இருக்கிறார்.
மாத : எனக்கா? என்ன சங்கதி?
ஸோமே : கேவலம் விலை மகளாகிய வஸந்தஸேனையை நாங்கள் எவ்வளவு பலவந்தப்படுத்தியும் அவள் எங்களுக்கு இணங்கவில்லை. இவ்வளவு தூரம் துரத்திக் கொண்டு ஓடி வரும் சிரமத்தை அவள் எங்களுக்குக் கொடுத்து, நித்திய தரித்திரனாகிய மாதவராயன் வீட்டிற்குள் போய் நுழைந்து கொண்டிருக்கிறாள். அவன் மீதே அவள் காதல் கொண்டிருக்கிறாளாம். நாங்கள் அவள் மனதிற்குப் பிடிக்கவில்லையாம். யாதொரு ஆக்ஷேபனையும் இல்லாமல் உடனே அவளை அவனே நேரில் என்னிடத்தில் கொண்டு வந்து ஒப்புவித்தால் தப்பினான். இல்லாவிட்டால் எப்பொழுதும் தீராத என்னுடைய பகைக்குப் பாத்திரனாதல் வேண்டும். அவனிடம் போய் இதைத் தெரிவி. நான் அருகில் இருந்து கேட்டுக் கொண்டிருப்பேன். நீ என்னை ஏமாற்றப் பார்த்தால் பாக்கைக் கதவின் மூலையில் வைத்து