முடிவாக நான் ஒரு வார்த்தை சொல்லுகிறேன். நீ போய் அதை மாதவராயனிடம் தெரிவி! கேவலம் விலைமகளாகிய வஸந்தஸேனையை நாங்கள் எவ்வளவு பலவந்தப்படுத்தியும் அவள் எங்களுக்கு இணங்கவில்லை. இவ்வளவு தூரம் துரத்திக் கொண்டு ஓடிவரும் சிரமத்தை அவள் எங்களுக்குக் கொடுத்து, நித்திய தரித்திரனாகிய மாதவராயன் வீட்டிற்குள் போய் நுழைந்து கொண்டிருக்கிறாள். அவன் மீதே அவள் காதல் கொண்டிருக்கிறாளாம். நாங்கள் அவள் மனதிற்குப் பிடிக்கவில்லையாம். யாதொரு ஆக்ஷேபனையும் இல்லாமல் உடனே அவளை அவனே நேரில் என்னிடத்தில் கொண்டு வந்து ஒப்புவித்தால் தப்பினான். இல்லாவிட்டால், எப்பொழுதும் தீராத என்னுடைய பகைக்கு அவன் அருகனாக வேண்டும். அவனிடம் போய் இதைத் தெரிவி. நான் அருகில் இருந்து கேட்டுக் கொண்டிருப்பேன். நீ என்னை ஏமாற்றப் பார்த்தால் பாக்கைக் கதவின் மூலையில் வைத்து நெரிப்பதைப் போல உன் தலையை என் பல்லால் நெரித்து விடுவேன். தெரியுமா?
ஸோமே : தெரியும். அப்படியே ஆகட்டும்.
வீர : சரி! போ; நான் இந்த மூலையில் இருக்கிறேன்.
(அவனும் சேவகனும் ஒரு மூலையில் மறைகிறார்கள்)
ஸோமே : கோமளா இராஜாவின் மைத்துனன் உன்னை இங்கு அவமானப்படுத்தியதை மாதவராயரிடம் சொல்ல வேண்டாம். அவர் ஏற்கெனவே தன் சொந்த விஷயங்களைப் பற்றி வருந்திக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார். இந்த சங்கதியையும் கேள்விப்படுவாரானால் அவருடைய துக்கமும், துன்பமும் இரட்டிக்கும்.
கோம : ஸோமேசரே! எனக்குத் தெரியாதா! இதைப் பற்றி சொல்லவும் வேண்டுமா! இதை அவரிடம் தெரிவிப்பதில் இலாபம் என்ன? அவருக்கு இதனால் வியாகூலந்தான் உண்டாகும்.
(இருவரும் வீட்டிற்குள் போகிறார்கள்.)
மாத : (உள்ளே வந்த வஸந்தஸேயனையைப் பார்த்துத் தனக்குள்) கோமளா என்ன இதற்குள் வந்து விட்டாளே இவள் ஸோமேசனுடன் போகவில்லையோ (உரக்க) கோமளா குழந்தை சிசுபாலன் குளிர் காற்றில் நெடுநேரமாய் நித்திரை செய்து கொண்டிருக்கிறான். அதிகக் குளிர்