இருந்த போதிலும் அவருடைய முதிர்ச்சி யாருக்கு வரும்! நல்லோரைத் தன் உயிரைக் கொடுத்துக் காப்பாற்றுபவர். புத்திமான்களுக்குக் கண்ணாடி போன்றவர். தீமை செய்தவருக்கும் நன்மையே செய்பவர். நற்குணங்கள் நிறைந்த பொக்கிஷ சாலை. மரியாதைக் கடல். பக்திக்கு உறை கல். புருஷரில் உத்தமன். புத்திமான். தயாளு. தரும புத்திரன். அணுவளவும் சத்தியம் தவறாதவர். இந்த ஊரில் அவர் ஒருவரே ஸ்தோத்திரத்திற்கு அருகமானவர். அவ்வளவு சிறந்த யோக்கியரை நாம் அவமானம் செய்தது பெரும் பிழை. நாம் இனி இவ்விடத்தில் நிற்பது தவறு போகலாம்.
வீர : என்ன வஸந்தஸேனையை விட்டு விட்டா?
தோழ : அவள்தான் எங்கேயோ காணாமல் போய் விட்டாளே!
வீர : அவள் எப்படி காணாமல் போய் விடுவாள். பார்க்கலாம் ஒரு கை. அவளைக் கண்டுபிடிக்கிற வரையில் நான் இவ்விடத்தை விட்டு வரமாட்டேன்.
தோழ : என்ன பிரயோசனம் நாம் எந்த அருமையான காரியத்தையும் செய்து விடலாம். காட்டானையைப் பிடித்து அடக்கி விடலாம். சிங்கம், புலி முதலிய துஷ்ட விலங்குகளைப் பிடித்துக் கட்டிப் பழக்கிவிடலாம். ஆனால் ஸ்திரீகளின் பிரியத்தை மாத்திரம் அவர்களுடைய மனதிற்கு விரோதமாகத் திருப்ப முடியாது என்பது தெரியாதா? இதனாலே காரியம் ஒரு நாளும் பலிக்காது. பழம் தானாய் பழுக்க வேண்டுமே யொழியத் தடியால் அடித்தால் பழுக்குமா? போகலாம் வாரும்.
வீர : உனக்கு விருப்பமானால் நீ போகலாம். நான் இங்கே தான் இருப்பேன்.
தோழ : நல்லது நான் போகிறேன். (போகிறான்)
வீர: இவன் போனால் போகட்டும். கோழி கூப்பிடா விட்டால் பொழுது விடியாதோ! என்ன பிரமாதம்! (ஸோமேசனை பார்த்து) அடே! முஷ்டி வாங்கும் பிராம்மணா! என்ன சொன்னாய்? உன் பல்லை உடைக்கிறேன். ஒரே உதையில் உன்னைக் கீழே வீழ்த்துகிறேன் பார்.
ஸோமே : நாங்கள்தாம் ஏற்கெனவே கீழே வீழ்த்தப் பெற்றிருக்கிறோமே!