கண்பெறு விருந்தே யென்ன அளித்தவோ குமர வேளைப்
பெண்பெறு துறக்க மீதோ? பெறலரு குணத்தின் குன்றோ?
புண்பெறு மனத்தி னாட்குப் புகலெனத் தோன்றி னாரோ!
என்ன குணம்! என்ன தோற்றம்! கை நிறைந்த பணத்தைக் காட்டிலும் கண் நிறைந்த கணவனே மேல் என்று சொல்வது உண்மை என்று இப்பொழுதே தெரிகிறது! இவரைவிட்டு எப்படிப் பிரிந்து என் வீட்டிற்குப் போவேன்! போனால் இத்தகைய சமயம் திரும்ப எப்பொழுது வாய்க்கும்! என்னுடைய மாட மாளிகை, ஆபரணங்கள் முதலிய சகலமும் போவதாய் இருந்தாலும் நான் கவலைப்பட மாட்டேன். இவருடன் சதா காலமும் இருக்கப் பெற்றால் அந்த ப்ரும்மானந்தம் ஒன்றே போதும். பிறவிக் குருடன் திடீரெனக் கண்ணை பெற்று உலகத்தில் உள்ள வினோதக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே, திரும்பவும் பார்வையை இழக்க நேர்ந்ததைப் போலானதே என் கதி! இருக்கட்டும் ஒரு தந்திரம் செய்கிறேன். (உரக்க) ஸ்வாமி! நான் உங்களுடைய கருணா கடாட்சத்தைப் பெற்றது உண்மை யானால் என்னுடைய ஆபரணங்களை இப்பொழுது இவ்விடத்திலேயே வைத்து விட்டுப் போக அனுமதி தர வேண்டும். இவற்றை அபகரிக்கும் பொருட்டே இத்துஷ்டர்கள் என்னைத் தொடர்ந்து துரத்திக் கொண்டு வந்தார்கள்.
மாத : ஸ்திரீ ரத்னமே! அவ்விதமான நம்பிக்கையை வைப்பதற்கு இந்த வீடு அருகமானது அல்லவே! என்ன செய்கிறது!
வஸ : பிரபு நாம் நம்புவது மனிதரையே அன்றி வீட்டை அல்லவே! ஆகையால் நீங்கள் இவ்விதம் சொல்லக் கூடாது. தயவு செய்ய வேண்டும்.
மாத : ஸோமேசா! அப்படியானால் இந்த ஆபரண மூட்டையை வாங்கிக் கொள்.
வஸ : இந்த உபகாரம் செய்தீர்களே இதுவே போதும். உங்களுக்கு ஸ்வாமி ஒரு குறைவையும் வைக்க மாட்டார்.