சிறுகதை - வாழ்க்கை - ரம்யா
இந்த வாழ்க்கை எவ்வளவு சுவாரஸ்யங்களை உள்ளடக்கி இருக்கு.எவ்வளவு அபூர்வமான விஷயங்களை உள்ளடக்கி நகருது.நினைக்கவே ப்ரமிப்பா இருக்கு.
ஒவ்வொரு தனி மனித வாழ்க்கையையும் திறந்து பார்த்தா அதில் இருக்கும் அதிசயங்கள் அவங்களுக்கே விளங்கும்.ஆனா அதை பார்க்க புரிஞ்சிக்க தான் இங்க யாருக்குமே அவகாசம் இல்லை.நானும் அப்படி தான் இருந்தேன்.அந்த நாள் வரைக்கும்.எதிர்பாரா விதமா தான் அந்த சந்திப்பு நடந்தது.ஆனால் அது என்னை ரொம்ப பாதிச்சது.ஆமா அவள் தான் அவளை தான்.என்னடா இது மறுபடி ஒரு 96படமா….பவர் பாண்டி யா…இப்படி எல்லாம் நினைக்காதீங்க.அவள் என் காதலி தான் ஆனா நான் சொல்ல வருவது அந்த சந்திப்பின் தாக்குதலை.முதல்ல எங்க சந்திப்பு பற்றி சொல்றேன்.
எதுக்கு ஓடறோம் என்ன செய்யறோம்னு தெரியாம கண்ண கட்டி காட்டில் விட்ட மாதிரி ஆட்டுமந்தை கூட்டமா பணம் வசதி கார் வீடு ன்னு சுத்திகிட்டிருக்கும் போது நமக்கெல்லாம் சில சமயம் வரும் பாருங்க ஒரு ஞானோதயம்.அது மாதிரி தான் எனக்கும் வந்தது.என்ன இந்த முறை ரொம்ப ஆழமா.அதனால தான் எப்பவும் போகிற கடற்கரை பூங்கான்னு இல்லாம ஊரவிட்டு தள்ளி இரைச்சல் இல்லாத ஒரு இடத்துக்கு போனேன்.அந்த மாதிரி இடம் அனேகமா காபி கடை தான் இருக்கும் நம்மூர்ல.நான் போனதும் அப்படி ஒரு கடை தான்.இயற்கை சூழல்ல எவ்வளவு நேரம் உட்கார்ந்திருந்தாலும் போங்கன்னு சொல்லாத இடம்.
அட்ரஸ் கேட்கறீங்களா…அப்புறம் தரேன்.
அங்க உட்கார்ந்து என் அலைபேசி அணைத்துவிட்டு சூடான ஒரு கோப்பை தேநீரோடு மரத்தடியில் உட்கார்ந்தேன்.ஏதோ அமைதி.ஆமாம் அலைபேசி அணைத்தாலே பாதி அமைதி கிடைத்துவிடும்.நான் யார் என்ன வேலை என்ன வயது எல்லாம் மறந்து மரத்தடியில் விளையாடிக்கொண்டிருந்த அணில்கள் பார்த்து இரசித்திருந்தேன்.திடீரென ஒரு மென்காற்று தலை வருட திரும்பினேன்.
அவளா அவளா அவளே தான்…அவளை தான் என் இதயத துடிப்பை இரட்டிப்பாக்கியவள்.என் கனவுகளை நிறங்களால் நிறப்பியவள்.என்னை உச்சத்தில் தூக்கி விட்டு தொலைந்து போனவள்.அவளை தான்.என் செல்வி.
நான் அவளை பார்த்துக்கொண்டிருக்க..அவளும் என்னை பார்த்துக்கொண்டிருந்தாள்.அடையாளம் தெரிந்தும் கொண்டாள்.அருகே வந்துக்கொண்டிருந்தாள்.இப்போதும் இதயம் துடித்தது.பரவசமா?காதல் மறுமுறை பூக்கிறதா?என்ன தெரியவில்லை. ஏறத்தாழ 20வருடம் ஓடிவிட்டது.