பொங்கல் 2020 ஸ்பெஷல் சிறுகதை - யார்கொல் அளியர்? - சாகம்பரி
யார்கொல் அளியர்? - அப்படினா தலைவன் தலைவி இருவரில் யார் தம்மை அடுத்தவருக்கு தந்து அன்பு கொண்டார்கள் என்று அர்த்தம். யார் கொல் அளியர்- தந்தவர் யார்.
'யானும் நீயும் எவ்வழி அறிதும்' கதையின் இறுதியின் தொடக்கம் இந்த சிறு கதை. ராஸ்பினும் ரக்சனாவும் அடுத்த பிறப்பில் எப்படி இணைந்தார்கள் என்ற சங்க காலத்து கதையை இங்கே சொல்லி வைக்கிறேன்.
தை திருநாள் தமிழர்களின் புது வருட பிறப்பு என்று சொல்கிறார்கள்… நாமும் கொஞ்சம் தமிழில்… தூய தமிழில் கதை படிப்போம்
நீலபூமி!
சுழித்து ஓடிய காவிரி நதியில் மூழ்கி குளித்து முடித்த முகுந்தன் கரையேறினான். காலை சூரியனின் கிரணங்கள்பட்டு அவன் கார்மேனி பளபளத்தது. ஆற்றின் மணலில் கால்கள் புதைய புதைய விரைவு நடை நடந்து கொண்டிருந்த அவன் சட்டென நின்றான். யார் அவள்?
ஊருக்கு நாட்டாமையாக இருக்கும் முகுந்தனுக்கு அந்த ஊர்வாசிகள் அத்தனை பேரையும் தெரியும்… இவள் நிச்சயம் புது வரவுதான்…
அந்த பெண்ணை அவன் இதற்கு முன் சந்தித்தது இல்லை! கருஞ்சிவப்பில் கட்டம் போட்ட சேலையை அணிந்து கொலுசு ஒலிக்க கையில் கூடையுடன் மல்லிகை செடியின் அருகே சென்று கொண்டிருந்தாள்.
“யாரது? ஊருக்கு புதுசா? உங்களை இங்கே இதுவரை பார்த்ததில்லையே”
“ம். நான் செண்பகம்!. பூக்கார பாட்டியின் பேத்தி. அம்மா அப்பா இறந்து போனதால இங்கே வந்துட்டேன்”
அவளுடைய கண்கள் நதியில் துள்ளி குதிக்கும் வெள்ளி மீன்களை நினைவுபடுத்த…. அந்த தீட்சண்யமான பார்வை அவனுக்குள் புதைந்துபோன எதையோ மேலெழுப்பியது.
அவள் பேசிக் கொண்டே ஒரு மல்லிகை கொத்தை பறித்து தலையில் வைக்க… அவனுக்கு சிலிர்த்தது.
ஓ… இந்த முறை அவன்தான் முந்திக் கொள்ள வேண்டும். இனி ஒரு முறை வாழ்க்கையுடன் விதி விளையாடினால் அந்த வேதனையை அவனால் தாங்க இயலாது. காத்திருந்த காலமெலாம் கனவாக கரைந்தோட,
அவசரமாக அவளை நோக்கி ஒரு அடியை எடுத்து வைத்தவன் கேட்டான்.
“நாம் இருவரும் திருமணம் செய்து கொள்வோமா?”
அவன் கேட்ட மாத்திரத்தில் திடுக்கிட்ட மெல்லியலாள் முகம் சிவக்க பதில் ஏதும் கூறாமல் விரைந்து அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.