மக்களும் கையில் இருந்த வாகை, கொன்றை போன்ற மலர்களை தூவி வாழ்த்தினர்.
(இத்துடன் செண்பகமும் முகுந்தனும் திருமணம் செய்த கதை முடிந்து விட்டது என்று எண்ணாதீர்கள். இன்னும் கொஞ்சம் இருக்கு…)
திருமண வரவேற்பு முடிந்து வீட்டிற்கு வந்தபின் செண்பகத்திடம் முகுந்தன் தனிமையில் பேசினான்.
“செண்பகம் நீ என்னுடைய மனைவி. நீண்ட நாட்கள் காத்திருந்த துயரம் இன்றுடன் தீர்ந்தது” என்றான்.
“எனக்கும்தான்…”
“பொய்… நான்தான் காத்திருந்தேன். நம்முடைய முதல் சந்திப்பிலேயே அதை சொல்லியும் விட்டேன். நீ என்னை திரும்பியும் பார்க்கவில்லை”
“நான் பெண்மகள் அதிலும் பெற்றோரை இழந்தவள்… உங்களுக்கு பதில் சொல்லி ஊர் பேச்சை வளர்க்க விரும்பவில்லை”
உண்மைதானே… இருவரை பற்றியும் ஊர் அலர் பேசினால் தாங்குமா? அவமானம் வந்து சேராதா?
“அது சரி, வள்ளி உன்னிடம் பேசியபோதுகூட நீ குறிப்பெதுவும் தரவில்லை. கருப்பனை அடக்கினால்தான் என்று மறுத்து விட்டாய்.”
“நான் தந்த குறிப்பே அதுதான். எம் குல வழக்கப்படி கருப்பனை அடக்குங்கள் என்று சொல்லித் தந்தேன்”
“நீ சொல்லி விட்டாய்… நான்தான் கடும் பயிற்சி எடுத்து உதிரம் சிந்தி உயிரை கொடுத்து கடைசிவரை போராடி என்னுடைய காதலை நிருபித்தேன். நீ ஒன்றும் செய்யவில்லை” பொய் கோபத்துடன் புகார் செய்தான்.
“ஆங்… என்ன ஒரு பெருமை… என் கருப்பன்தான் காதலுக்கு வழிவிட்டு பணிந்து சென்றது…”
“காதலுக்கு வழிவிட்டதா? யாருடைய காதலுக்கு…?”
“என்னுடைய காதலுக்குதான்…”
“ஓஹ்… அதனிடம் நீ எதுவும் சொன்னாயா?”
“சொல்லவில்லை. அதற்கு தெரிந்திருக்கும். என் மனம் கவர்ந்தவர் நீங்கள்தான் என்று”
“எதற்கு இத்தனை சமாளிப்பு? கருப்பனை வேறு இதில் இழுக்கிறாய்”
“உண்மையை சொல்லுங்கள். தோற்று விடுவோம் என்று ஒரு நொடியாவது உங்களுக்கு தோன்றவில்லை?…”
“அது…”