“வீட்டில் இருக்கும் பெண்தானே காளையை வளர்த்தாக வேண்டும்”
“வளர்ப்பது வேறு.. வளர்த்து விடுவது வேறு. செண்பகம் அந்த காளையை எமன் வரும் எருமைபோல வளர்த்திருக்கிறாள். அந்த காங்கேயம் காரியை ‘கருப்பா… கருப்பா’ என்று பூந்தழுவலாக அழைத்து வைக்கிறாள். அவள் அருகில் புதிதாக யாரையாவது பார்த்தால் முன்னங்கால்களை ஊன்றி உயர நிமிர்ந்து எட்டி மிதிப்பது போல பார்த்து கண்கள் சிவக்க முறைக்கிறது. எம் தலைவியை நோக்கி இனி ஒரு அடி எடுத்து வைத்தாலும் உன் உயிர் என் வசம் என்று சூளுரைக்கும் பார்வை”
“குமரா, ஒரு விசயத்தை மறந்து விட்டாய். இது போன்று காளையை வளர்ப்பது வழக்கமான ஒன்றுதானே”
“ஆமாம்… பெண் பிள்ளை பிறக்கவுமே மாமரம் நடுவதும்,,, அவள் கன்னியானவுடன் காளையை வளர்ப்பதும் குல வழக்கம்தான். அவளை மணமுடிக்க வேண்டுமெனில் அந்த காளையை அடக்க வேண்டும் என்பதும் உறுதியான உண்மைதானே…”
“நாமும் அதற்கு தயாராக காளையை அடக்கும் பயிற்சியை கற்று வைத்திருக்கிறோமே. நீ ஏன் பயப்படுகிறாய்… உனக்கு திருமணமெனில் நீயும் காளையை அடக்க வேண்டி வரும்”
“ஹாஹ்ஹா… அது எனக்கு தெரியும். வள்ளி வீட்டு காளை ரொம்பவும் அமைதியானது. மேலும் அதை நான் அவ்வப்போது சந்தித்து நட்பு தூது விட்டு வைத்திருக்கிறேன்”
“வள்ளி…? பாளையத்தாரின் பாதுகாவலர் வெற்றிவீரனின் மகளா…? புரிந்து கொண்டேன். காதலியை கண்டு காதல் சொல்லாமல் காளையை கண்டு..”
“இல்லை நண்பா… தவறாக நினைக்காதே. காளையை அடக்கினால்தான் கன்னி என்ற நிர்ணயம் எல்லாம் காதலில் கிடையாது. எந்த பெண்ணையும் விரும்பாமல் இருந்தால்… ஏதாவது ஒரு கன்னியை மணமுடித்தால் போதும் என்று இருந்தால்… இது போன்ற ஏறுதழுவலில் கலந்து கொண்டு வீரத்தை காட்டி மணம் முடிக்கலாம். ஆனால், என் விசயம் அப்படியல்ல… தோல்வி என்றால் வாழ்க்கையே முடிந்து போய்விடும். அதை வள்ளியாலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அதனால்தான் இந்த ஏற்பாடு”
“அடடா.. வள்ளியும் கள்ளிதானா? அவளை நல்ல பெண் என்றல்லவா நினைத்தேன்.”
“மிக மிக நல்ல பெண். என்னை நம்பாத நல்லவள். ஏறுதழுவலின்போது அவள் வீட்டு காளையை அடக்க முடியாமல் போனாலும் பரவாயில்லை ஆனால் வேறு எந்த காளையையும் அடக்கக் கூடாது என்று சத்தியம் வாங்கி இருக்கிறாள்”
“அப்படியானால் பெயரளவில்தான் நீ குமரன். இரண்டு இல்லக்கிழத்திகள் என்பது உனக்கு