கதிரவனின் இளஞ்சூட்டிலும் குளிர் நிலவென அவனுடைய கண்களுக்கு தெரிந்த அந்த காரிகை, உதய சூரியனின் வரவை கண்டு மேற்கில் சென்று மறையும் அதிகாலை நேரத்து நிலவைபோல அவன் பார்வையில் ஏக்கம் நிறைத்து மறைந்தாள்.
“என்ன நண்பா, காலையிலேயே கண்களில் மயக்கம் தெரிகிறது.?”
“யாரது?” என்று திடுக்கிட்டு திரும்பியவன்,
‘ஓ… குமரனா’ என்று கேட்க,
“குமரன்தான்… அதனால்தான் இன்னும் உன் பார்வை பறிபோகாமல் பத்திரமாக இருக்கிறாய்” பதில் கூறியவனின் கண்களில் கேலி நிறைந்திருந்தது.
“ஓ… ஏன் பயமுறுத்துகிறாய்? கண்களை பிடுங்கும் அளவிற்கு நான் என்ன தவறு செய்தேன்”
“பார்த்தால் பரவாயில்லை… கவரும் நோக்கத்தில் பார்வை பரவினால் அது கண்களை மட்டுமல்ல தலையையே பறிகொடுக்கும் அளவிற்கு பெரும் தவறாகி விடாதா?”
“வீண் பழி சுமத்துகிறாய்… நான் அந்த பெண்ணிடம் முதல் அறிமுகம்தான் பேசினேன்” சொல்லும்போதே ‘கடவுளே, அவளிடம் நான் பேசியதை இவன் கேட்டிருக்கக் கூடாது” என்று வேண்டிக் கொண்டான்.
இதற்கெல்லாம் அவர் ஒத்துழைப்பாரா என்ன? மேலும் முகுந்தனின் காதலை நிறைவேற்றும் செயல்முறை திட்டத்தில் குமரனும் இருக்கிறானல்லவா?
“ம்… முதல் அறிமுகத்திலேயே அந்த பெண் மிரண்டு ஓடும் அளவிற்கு எதையோ கூறி இருக்கிறாய். அது என்னவென்று தெரிந்து கொள்ளலாமா?”
கேட்டு விட்டான்… கேட்டே விட்டான்….!
“அது… ஒன்றுமில்லை. அவள் பூ விற்பதை பற்றி கேட்டேன்”
“ஒப்புக் கொள்ள மனம் மறுக்கிறதே நண்பா”
“சரி… மணமேடைக்கு அலங்காரம் செய்யும் பணியை செய்வாயா என்று கேட்டேன்”
“இந்த பாழும் மனம் இதையும் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்கிறதே…..ஏஏஏஏ”
“ரொம்ப இழுக்காதே… உண்மையை சொல்லிவிடுகிறேன். என்னுடைய மணமேடைக்கு அலங்காரம் என்று கேட்டேன்”
“ம்ஹூம்”
“ஆங்… நம்முடைய மணமேடை என்று சொல்லிருக்கணும்”
“ஒரு வழியாக உண்மை வந்து விட்டது. அதாவது இரண்டு நாட்களுக்கு முன்தான் இந்த ஊருக்கு வந்த பெண்ணிடம் திருமணம்பற்றி பேசி இருக்கிறாய். இதில் இந்த ஊருக்கு