தலைவனாக வேறு இருக்கிறாய்”
“தலைவன் என்றிருந்தால் தலைவி என்று இருக்க வேண்டுமல்லவா? அதிலும் இவள்தான் என்று முடிவு செய்தபின் கேட்பதற்கு ஒரு நொடி நேரமே மிகத்தாமதம் அல்லவா?”
“காதல்… அந்த அளவிற்கு அதிவேகத்தில் தொண்டைக்குள்ளிருந்து வார்த்தைகளை இழுத்து வெளிக் கொண்டு வந்து விட்டது”
“அப்படி இல்லை குமரா! அவளை பார்த்ததும் நீண்ட நாட்களாக பழகிய நினைவு வந்தது. அவளுக்காகவே காத்திருப்பதுபோல தோன்றியது.. கண் சிமிட்டும் நேரத்திற்குள் முடிவு செய்து விட்டேன். அதுதான்…”
“அவளுக்காக நீ காத்திருந்தாயா? அப்படியெனில் உனக்காக அவள் வீட்டிலும் ஒன்று காத்திருப்பது தெரியுமா?”
“எது?”
“கரிய நிறம்.. எந்நேரமும் கோபத்தில் சிவந்த கண்கள்..” குமரன் சொல்லும்போதே முகுந்தன் யோசித்தான்…
‘அவளுக்கு பெற்றோர் இல்லை என்று சொன்னாளே. ஒருவேளை முறைமாமன் என்று யாராவது…’
“போர்வாள் போன்று நீண்ட கூரிய இரண்டு கொம்புகள்…. அதற்கு தினமும் எண்ணை நெய் தடவி சாணை பிடித்து கூர் ஏற்றி வருகிறார்கள்.”
“ஓ எருதா…”
“இல்லை ஆறடி உயரமுள்ள எமன். மற்ற காளைகள் வயிற்றைதான் பதம் பார்க்கும். இது எதிரே நிற்பவனின் மார்பை துளைத்து விடும். குடலுக்கு பதிலாக இருதயத்தை குத்தி எடுத்துவிடும்”
“ நீ பார்த்திருக்கிறாயா?”
“ஆம்… என் வீட்டிற்கு அருகில்தானே செண்பகத்தின் வீடு. இரண்டே நாட்களில் என் அன்னையின் அன்பை பெற்று விட்டாள். எதையாவது சமைத்து அவளுக்கு கொடுத்து விட்டு வரச் சொல்வார்கள். ம்… அப்படி பார்க்காதே… அவளை என் தங்கையாக வரித்து விட்டேன்”
“அதுதான் நல்லது… இப்போது புரிகிறது. அவள் வீட்டிற்கு நீ செல்லும்போது அந்த காளையை பார்த்து விட்டாய். கொஞ்சம் பயந்தும் போய் விட்டாய்”
“கொஞ்சம் இல்லை. நிறைய… அப்படி ஒரு திகிலூட்டும் தோற்றம். கண்ணோடு கண் நோக்கி மிரட்டும். ஆனால் செண்பகம் பயப்பட மாட்டாள். அதனை பராமரிக்கும் பணி முழுவதையும் அவளே செய்கிறாள்.”