ஆரம்பித்தனர்.
இந்திர விழாவும் ஆரம்பித்தது. ஐந்தாம் நிகழ்வாக ஏறுதழுவல் விளையாட்டு ஆரம்பித்தது. பரண்களில் மணமுடிக்க காத்திருக்கும் பெண்கள் அமர்ந்திருக்க… அவர்களுடைய காளைகள் தொழுவிற்குள் வந்தன. ஒருவர் ஒவ்வொரு காளையையும் அதனை வளர்த்த கன்னியையும் அறிமுகம் செய்தார். சில காளைகள் கன்னிகைக்காக அல்லாமல் தங்க காசு முதலிய பரிசு தொகுப்பினை கழுத்தில் கட்டிக் கொண்டும் வலம் வந்தன. ஏறுதழுவல் ஒரு முரசு ஒலியுடன் ஆரம்பித்தது. அதையடுத்து,
எழுந்தது துகள்
ஏற்றனர் மார்பு
கவிழ்ந்தன மருப்பு
கலங்கினர் பலர்
என்ற கலித்தொகை பாடலுக்கு ஏற்ப அந்த இடம் காளைகளின் குளம்பினாலும் அவற்றை பிடிக்க பாய்ந்த பொதுவர்களினாலும் மண் தூசு பறக்க போர்க் களமானது. எதிரில் நிற்பவரை குத்தி கிழிக்கும் நோக்குடன் கொம்புகள் கவிழ்த்து காளைகள் பாய, அதை எதிர்கொள்ள திண்ணென்ற மார்புடன் வீரர்கள் பாய அதை கண்ட பலர் கலங்கி போயினர்.
அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த காரிகருப்பன் சற்று பொறுத்துதான் களம் இறங்கினான். அதற்கும் முன்பாகவே களம் இறங்கிய முகுந்தன் மணமாலை கோராத சல்லிக்காசுகள் கொண்ட கிழியை கொம்பில் கட்டிய காளைகளை அடக்கினான். முகுந்தனுக்கு எதிர்வாதம் செய்தவர்கள்கூட வாயடைத்து போகும் அளவிற்கு அவனுடைய திறமை வெளிப்பட்டது.
ஆனால்…. கண்பட்டதோ… யாருடைய கொடும் வாக்கு பலித்ததோ முகுந்தனுக்கு அடிபட்டு விட்டது. மஞ்சுவிரட்டு காளையினால் அல்ல, உடன் ஓடிக் கொண்டிருந்த மற்றோரு வீரன் தடுமாறி முகுந்தனின் பின்பக்கமாக விழ அவனுடைய இடையில் சொருகி இருந்த ஏதோ ஒன்று முகுந்தனின் மணிக்கட்டை பதம் பார்த்தது. ரத்தம் பெருக களம் விட்டு விலகிய முகுந்தனுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவனுடைய காயத்தை பார்க்கவுமே வைத்தியரான குமரனின் தந்தைக்கு புரிந்து விட்டது. விசம் தோய்ந்த அடையாளம் தெரிந்தது. இது ஏதோ சதி திட்டம் என்ற புரிநது கொண்டார். மயங்க ஆரம்பித்த முகுந்தனுக்கு மூலிகை சிகிச்சை செய்து தெளிய வைத்தார். கையில் பட்டிருந்த காயத்திற்கும் மருந்திட்டு குமரன் தந்த நீல நிற பட்டுத்துணி கொண்டு கட்டி வைத்தார்.