தலைவர்களும் கலந்துகொண்டு, அவனைப் பாராட்டி பேசினர். அவர்களுக்கு நன்றி கூறி பேசும்போது, அவன் சூளுரைத்தான்:
"எனக்கு திருமணம் ஆகிவிட்டது என்பதற்காக, என் பணிகளில் எந்தவித தொய்வும் இருக்காது. முடிந்தால், என் மனைவியையும் சேர்த்துக்கொண்டு இருவருமாக களத்தில் குதித்து பணியாற்றுவோம்"
பொதுமக்களின் கைதட்டல், விண்ணதிர, மண்ணதிர ஒலித்தது!
அந்த வினாடியே பிரபாவின் மனதில், கிலி பிடித்தது!
பிரபா அண்ணனின் முகத்தைப் பார்த்தாள். அவன் சிதம்பரம் தம்பதிகளை பார்த்தான்.
" பயப்படாதீங்க! இப்பத்தானே கல்யாணமே ஆகியிருக்கு. இன்றிரவே சாந்தி முகூர்த்தம் நடத்திடுவோம், ஹனிமூன் எனும் பெயரிலே கல்யாண தம்பதிகளை வெளியூரோ, வெளிநாடோ அனுப்பிடுவோம். இப்படி கொஞ்சம் கொஞ்சமா, அவனை வழிக்கு கொண்டு வந்துடலாம்"
அவர்கள் ஏற்பாடு செய்தபடியே, சாந்தி முகூர்த்தமும் வெளிநாட்டில் ஒருவாரம் தேன்நிலவும் நடந்தது. அவனைப் பெற்றவர்கள் சிதம்பரத்துக்கு திரும்பிச் சென்றனர். பிரபாவின் அண்ணன், தன் கடமைகளில் மூழ்கினான்.
மாட்டிக் கொண்டது, பிரபா மட்டுமே!
அவள் கணவன் நடராசன், அவளை நேசித்தான். கேட்டதையும் கேட்காதவற்றையும்கூட அவளுக்கு வாங்கிக் கொடுத்தான்.
ஆபீஸ் கிளம்பும்போது, அவளுக்கு தவறாமல், முத்தம் தந்துவிட்டு, கிளம்பினான். மதியம் ஒருமுறை, அவளுடன் போனில் பேசினான். இரவு வீடு திரும்பியதும், அவளை கொஞ்சி மகிழ்ந்தான்.
ஆனால், அவனுடைய பணிகளிலே முழுமூச்சுடன் தொடர்ந்து ஈடுபட்டான். குறிப்பாக, மாணவர்கள் நடத்திய போராட்டங்களில் முன்னணியில் நின்றான். மாணவர்களும் அவனை தலைவனாக ஏற்று, அவன் கொந்தளிப்பை கொழுந்து விட்டு எரியச் செய்தனர்.
பாரதம் முழுவதும், எல்லா நகரங்களிலும், மாணவர் போராட்டம் தீவிரமாகி ஆங்காங்கே கலவரமும் நடந்து, சிலர் கைதுமாயினர்.
போலீஸ் அதிகாரி ஒருவர், வீடு தேடி வந்து, பிரபாவிடம் எச்சரிக்கை செய்தனர்.
" இத பாரும்மா! நீ சின்ன பெண்ணா இருக்கே! புதுசா கல்யாணமாயிருக்கு, உன்னை பார்த்தால் பரிதாபமாயிருக்கு, ஆனால் எங்களுக்கு வேறுவழியில்லே, மேலிடத்திலிருந்து எங்களுக்கு பிரஷர் வருது, நடராசனை உடனடியா கைது செய்யச் சொல்லி!