ஒரு பெரியவர், அவர்களை, இத்தனை நேரம் கவனித்துக் கொண்டிருந்தது, புரிந்தது.
அவருக்கு வணக்கம் செலுத்தினர்.
" உங்க புனிதமான பக்தி வீண்போகாது. நீங்க மனசிலே என்ன நினைச்சிருந்தாலும், அது கட்டாயம் நிறைவேறும். தைரியமா இருங்க!"
மீண்டும் நால்வருக்கும் மெய் சிலிர்த்தது!
அவருக்கு எப்படி நன்றி சொல்வது என தெரியாமல், கைகூப்பி விடைபெற்று தெருவில் இறங்கினர்.
பின்னாலிருந்து, இருவர் அவர்களை அழைத்து நிற்கும்படி கூறினர்.
அவர்கள் கரைபோட்ட வேட்டி கட்டி, தோளில் துண்டும் போட்டிருந்தனர்.
அருகில் வந்ததும், நால்வரையும் நோட்டமிட்டுவிட்டு, பேசினர்.
"இன்று எங்க கட்சி, ஊர்வலம், போராட்டம் எல்லாம் நடத்தப்போகுது, கூட்டத்துக்கு ஆள் சேர்க்கிறோம். நாள்முழுவதும் சாப்பாடு, டீ எல்லாம் தருவோம். முடிந்ததும், நூறு ரூபாய் பணமும் தருவோம், வரீங்களா?"
நால்வரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டே தலையசைத்து சம்மதம் தெரிவித்தனர்.
அவ்வளவுதான்! அன்றைய போராட்டத்தை தொடர்ந்து, தினமும் பிரசார கூட்டம், வீடுவீடாக துண்டுபிரசுரம் வினியோகம், நகரசபை தேர்தல் என வேலை இருந்துகொண்டே இருந்தது.
கட்சி அலுவலகத்திலேயே படுக்க, குளிக்க வசதி இருந்தது.
கேட்கவேண்டுமா? கட்சி ஊழியர்கள் இப்போதெல்லாம் இரவில் கட்சி அலுவலகத்திலேயே தங்கினர், காரணத்தோடு!
இப்போதெல்லாம் அந்த நால்வர், நாளை, மறுநாள் என்ற கவலையின்றி, அந்தந்த நிமிடத்தில் நிம்மதியாக வாழ்ந்தனர்.
தவறாமல், தினமும் காலை எழுந்ததும், காளியம்மன் கோவிலுக்குச் சென்று சுத்தப்படுத்தி, கோலம்போட்டு, அம்மனை தரிசித்து வணங்கத் தவறுவதேயில்லை!