அதிகாரிகள் அதை அலட்சியப்படுத்தினாலும், ஒரே ஒரு போலீஸ்காரன் மனம் இளகி, மற்றவர்களுக்குத் தெரியாமல், முனுசாமியின் வீட்டுக்குச் சென்று பார்த்தான்.
உண்மை தெரிய வந்ததும், அதிர்ச்சியடைந்தான், அந்த போலீஸ்!
அதற்குள் அந்த வீதியிலுள்ள ஏழை எளியவர்களுக்கு முனுசாமியை போலீஸ் பிடித்து காவலில் அடைத்திருப்பதே, ஒரு ஏழைக் கிழவியின் மரணத்துக்கு காரணம் என தெரியவந்தவுடன், காவல்துறைக்கு விரோதமாக கொதித்துக் கொண்டிருந்தனர்!
முனுசாமியின் தெரு நண்பன் ஒருவன், காவல்நிலயம் சென்று, முனுசாமியின் தாய் மரணமடைந்துவிட்டதை தெரிவித்து, முனுசாமியை உடனடியாக விடுவிக்கச் சொன்னான்.
அதே நேரத்தில், உண்மை தெரிந்திருந்த போலீஸ்காரனும் அதிகாரியிடம் தெரிவிக்கவே, முனுசாமி காவலில் இருந்து விடுவிக்கப்பட்டான், நிபந்தனைகளுடன்!
முனுசாமி, தாயின் ஈமக்கடன்களை முடித்துவிட்டு காவலுக்கு திரும்பிவிட வேண்டும். அதுவரையில், தினமும் ஒருமுறை காவல் நிலயம் வந்து கையொப்பமிட்டு செல்லவேண்டும்!
தலைதெறிக்க வீட்டுக்கு ஓடினான், முனுசாமி! தாயின் சடலத்தை பார்த்து, இதயமே வெடித்துவிடும்போல, கதறி அழுதான்.
தாயின் உயிரை காப்பாற்ற தான் டாக்டரை தேடி ஓடியபோது, போலீஸ் பிடித்துச் சென்றதனால்தான், தாயை சமயத்தில் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது, என புலம்பினான்.
அதே சமயம், முதலமைச்சரை கொல்ல சதி செய்தது, அவருடைய சக அமைச்சர் ஒருவரே! லெனின் அல்ல! என்று கண்டுபிடிக்கப்பட்டு ஊடகங்களில் வெளிச்சம் போட்டு காட்டப்பட்டது. ஊரெங்கும் இதே பேச்சு!
முனுசாமி வாழும் தெருவாசிகளுக்கும் தெரிய வந்ததும், முனுசாமி கூடியிருந்த அனைவரிடமும் தன் இதயக்குமுறலை பகிர்ந்துகொண்டான்.
" பார்த்தீங்களா! யாரோ பெரிய மனுஷன் செய்த குற்றத்துக்கு, ஒரு ஏழை தொழிலாளியின் தாய் பலியாக்கப்பட்டுள்ளதை! இன்னமும் அந்த அமைச்சரை காவலில் வைத்திருப்பதாகவோ, அவரை சார்ந்தவர்களை கைது செய்ததாகவோ செய்தி இல்லை, ஏன் தெரியுமா? அது பெரிய இடம்! பணக்காரன்! அவனிடம் சட்டத்தை நீட்டினால், முதலமைச்சரின் பதவிக்கே ஆபத்து வரலாம், ஏன்னா இதுநாள்வரையில் கூட்டாளிகளாக இருந்தவர்களாயிற்றே! ஏழைகளுக்கு நியாயம் வழங்கப்படாமல் அநியாயம் இழைக்கப்படுகிறது, என்பதை தெரிந்துகொள்ளுங்கள்!"
" இதை நான் சொன்னால், எனக்கு 'பயங்கரவாதி' பட்டம் தந்து உள்ளே தள்ளுவார்கள். ஏன்னா என் பெயர், லெனின்!