ஏன் இன்னமும் பொறுமையாக இருக்கீங்க? எல்லோருமாக காவல்நிலயம் போய், நியாயம் கேளுங்கள்! முனுசாமியின் இழப்புக்கு ஈடு செய்யமுடியுமா என்று கேளுங்கள், போங்க!"
லெனினின் உரையை கேட்டபிறகும், சும்மா இருக்கமுடியுமா, அடிபட்ட கும்பலால்?
கூட்டமாக உடனே காவல்நிலயத்தை சூழ்ந்ததும், நிலைமையை அறிந்த, அதிகாரி உடனே என்ன செய்திருக்கவேண்டும், நியாயமாக?
"நடந்தது, திட்டமிட்டு செய்யப்பட்டதல்ல, ஒரு விபத்து! எங்களை மன்னித்துக் கொள்ளுங்கள்!"
மாறாக, போலீஸை ஏவி கூட்டத்தை கலைந்துபோக விரட்டினார். தடியடியும் நடந்தது.
கலவரத்தில், ஒரு முதியவர் கீழே விழுந்து மிதிபட்டு மூச்சுத்திணறி மாண்டுபோனார்.
இது விரட்டப்பட்ட பொதுமக்களுக்கு தெரிவதற்குள், போலீஸ்காரனுக்குத் தெரிந்து, அவன் உள்ளே ஓடிப்போய் அதிகாரியிடம் தெரிவித்ததும், பதட்டத்தில் அவர் உத்தரவிட்டார்.
" மக்களுக்கு தெரிவதற்கு முன், உடனடியாக அந்தக் கிழவனை இங்கிருந்து அகற்றி வேறெங்காவது போட்டுவிடுங்கள்!"
மீண்டும் ஒரு அநீதியா? இப்போது மனதிற்குள் குமுறியது, லெனினோ, முனுசாமியோ அல்ல; அவர்களுக்கு விஷயம் தெரியாது!
எந்தப் போலீஸ்காரன் முதலில் தானாகவே முனுசாமியின் வீடு சென்று அவன் தாய் இறந்துபோனதை உடனே அதிகாரிக்கு தெரிவித்தானோ, அவன்தான்!
தன்னால் முடிந்ததை செய்யலாம் என தீர்மானித்து, அந்த முதியவனின் உடலை காவல்துறையினர் அப்புறப்படுத்தி எடுத்துச் செல்வதை தனது செல்போனில் படம் பிடித்தான்!
இதுவரையில் நடந்தவைகளில் உள்ள நியாய-அநியாயங்களை பார்ப்போமா?
முனுசாமி தன் தாயை காப்பாற்ற கதறியபோது, காவல் அதிகாரி உடனடியாக போலீஸை முனுசாமியின் வீட்டுக்கு அனுப்பி, உண்மை அறிந்து, மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்திருக்கலாம், இல்லையா? அப்படியெல்லாம் செய்யக்கூடாதென எந்த சட்டம் அவர்களை தடுக்கிறது?
அது மட்டுமா? ஒருவன் குற்றவாளி என சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படும் வரையில், அவனை நிரபராதியாகவே கருதவேண்டும் என உச்சநீதிமன்ற தீர்ப்பே கூறுகிறது!
ஒரு போலீஸ்காரனுடன் முனுசாமியை வீட்டுக்கு முதலிலேயே அனுப்பி அவன் தாய்க்கு சிகிச்சை ஏற்பாடு செய்ய அனுமதித்திருக்கலாம், அதை எந்த சட்டம் தடுக்கிறது?
அதிகாரங்கள் மக்களுக்கு உரிய நலன்களை உரிய நேரத்தில் கிடைக்கப் பயன்படுத்தவே, மாறாக ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்த அல்ல என்பதுதானே, நியாயம்?