சிறுகதை - காதல் கதை - பிந்து வினோத்

“குட் மார்னிங் செல்லம்ஸ்...” என்றாள் பிரீதா சந்தோஷமாக.
அவள் சொன்னது புரிந்ததோ இல்லையோ, காற்றடிக்கவும், அந்த அழகிய ரோஜா மலர்கள் இரு பக்கமும் அசைந்தாடின. ப்ரீதாவின் கண்களுக்கு அவை அனைத்தும் அவளுக்கு மறுவணக்கம் சொல்வதாக தோன்றியது. தானாக முகத்தில் ஒரு பெரிய புன்னகை தோன்ற,
“நான் இன்னைக்கு அஞ்சு நிமிஷம் லேட், என்னை தேடுனீங்களா இல்லையா?” என்று கேட்டபடி அந்த அழகிய மலர் செடிகளுக்கு நீர் ஊற்ற தொடங்கினாள்.
செடிகளுடன் அதுவும் பூச்செடிகளுடன் பேசினால் அவற்றுக்கும் புரியும் என்று எங்கேயோ சிறு வயதில் படித்த நினைவில் இது போல் செடிகளுடன் பேசுவது பிரீதாவின் வழக்கமாக இருந்தது. மனிதர்களுக்கு எப்படி தங்களுடன் அன்புடன் பேசி பழகுபவர்களை கண்டால் பிடிக்கிறதோ, அது போல் செடிகளுக்கும் தன்னுடன் அன்புடன் பேசுபவர்களை பிடிக்கும் என்பது அவளின் நம்பிக்கை.
அவளுடைய நம்பிக்கையில் உண்மை இருக்கிறதோ இல்லையோ, அவள் சிறிதாக வாங்கி நட்டு வைத்த அந்த ரோஜா செடிகள், அவள் இங்கே செல்லம்மாவின் வீட்டிற்கு வேலைக்கென வந்து ஆகி இருந்த ஒன்றரை ஆண்டுகளில் செழிப்புடன் வளர்ந்து, மலர்ந்து, மணம் வீசிக் கொண்டிருந்தன.
ஒரு வழியாக எல்லா செடிகளுடனும் பேசி, செல்லம் கொஞ்சி, சீராட்டி முடித்தவளின் கண்களில், ஒரு ஓரத்தில் மொட்டாக மலர தொடங்கி இருந்த அந்த அழகிய சிகப்பு வண்ண ரோஜா பட்டது... அவளின் நினைவுகள் தானாகவே இரண்டரை வருடங்கள் பின்னே சென்றன...
அன்று,
இதே போன்ற அழகிய ரோஜா பூவை அவளிடம் நீட்டிய வினய்,