அவனின் முக பாவனையை பார்த்து, தான் சொல்வது உண்மை என்பதை அவனுக்கு உணர்த்தி விடும் வேகத்தில் பேசினாள் பிரீதா.
“உண்மையாக தான் சொல்றேன்... எத்தனையோ நாள் நினைச்சு நினைச்சு என் முட்டாள்தனத்தை நொந்து இருக்கேன்... நான் ஏன் அன்னைக்கு உங்களிடம் அப்படி நோ சொன்னேன்னு யோசிச்சு அழுதிருக்கேன்...”
பேச்சு வேகத்தில் பேசிய பிரீதா, தன் மனதில் மறைத்து வைத்திருந்ததை சொல்லி விட்டதை தாமதமாக புரிந்துக் கொண்டு விழித்தாள்!
“நோ சொன்னது பிடிக்காமல் அழுதீங்களா, அப்போ என்ன சொல்லலைன்னு பீல் செய்தீங்க?”
வினய்யின் குரலில் கேலி இருந்ததோ? பின் அவன் ஏன் கேலி செய்ய மாட்டான்? அவளை அவன் முழுவதுமாக நினைவில் இருந்தே அகற்றிய பிறகு இப்படி அவள் வந்து உளறினால் வேறு என்ன செய்வான்?
பிரீதாவின் கண்களில் இருந்து ஒன்றிரண்டு கண்ணீர் துளிகள் கொட்ட துவங்கியது...
அது வரை தள்ளி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வினய்,
“பிரீதா, என்ன இது? ப்ளீஸ் அழாதே... ப்ளீஸ்டா...”
அவனின் பேச்சு மாறிய தோரணையில் பிரீதா கண்ணீர் ததும்பிய விழிகளுடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
அவசரமாக அவளின் அருகில் வந்து கண்ணீரை துடைத்தவன், அவளை அப்படியே மார்போடு அணைத்துக் கொண்டான்.
“இப்போ தானே சந்தோஷமான விஷயத்தை சொன்ன அதற்குள் எதற்கு இந்த அழுகை... ஒரு நிமிஷம் இரு அந்த பிசாசுக்கு ஒரு மெசேஜ் அனுப்பிட்டு வரேன்....”
தலையும் புரியாமல் வாலும் புரியாமல் அவன் செல்போனை எடுத்து மெசேஜ் அனுப்புவதை பார்த்தபடி நின்றாள் பிரீதா.
மெசேஜ் அனுப்பிவிட்டு, செல்போனை பாக்கெட்டினுள் வைத்தவன்,
“பிரீ கண்ணா, உன்னை போய் நான் மறப்பேனா? இது எல்லாம் அந்த விஜி பிசாசுக்காக... சுமித்ரா தெளிவா நான் சொல்லி கொடுத்த மாதிரியே நான் சொல்ல வேண்டாம்னு சொன்னதா தெளிவா சொன்ன பிறகும் நீ என்னை கான்டாக்ட் செய்ய முயற்சி செய்ய கூட இல்லையே...”
அவன் சொல்வது புரிய ஒரு சில நொடிகள் எடுத்துக் கொண்டவள்,
“ஓ! ஆனால் எனக்கு உங்களோடு பேச தயக்கமா இருந்தது...”
“நல்லா தயங்கின போ! உன்னிடம் அன்று நோஸ் கட் வாங்கிய பின் ரொம்ப கஷ்டமா இருந்தது... ஒருவேளை உன் மனசில் வேறு யாரோ இருக்காங்களோன்னு கூட சந்தேகமா இருந்தது... சுமித்ரா உனக்கு படிப்பிலும் அந்த துறையிலும் இருக்கும் ஆர்வத்தை பத்தி சொன்னாங்க... சரி ஒரு வருஷம் கழிச்சு நேரா உங்க அப்பாவிடம் பேசி பார்க்கலாம்னு நினைச்சேன்... அப்புறம் நீ வேற உங்க அப்பாவோட இழப்பினால் வருத்தத்தில் இருந்த... இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும்னு தள்ளி போட்டேன்... அம்மா தான் ரொம்ப அவசரப் பட்டுட்டு இருந்தாங்க... ஆனால் என் தங்கைன்னு ஒரு குட்டி சாத்தான் இருக்கே அவள் வேற உன் காதல் உண்மையா இருந்தா அண்ணியே வந்து உன்னிடம் லவ் சொல்லுவாங்கன்னு என்னை ஓட்டிட்டு இருந்தா... அது தான் நாங்க பெட் வச்சிருந்தோம்...”
“பெட்டா?”
“யெஸ்... நீயாகவே என்னிடம் வந்து உன் காதலை சொன்னா தான் என் லவ் வெற்றி பெற்றதா அர்த்தமாம் அந்த மேதாவிக்கு!”
“என்ன அண்ணா என்னை பத்தி பேசிட்டு இருக்க?” என்றபடி வந்த விஜி,
“என்ன அண்ணி நீங்க? இவனை பத்தி அவ்வளவு எடுத்து சொன்னேன், ஆனாலும் இப்படி சொதப்பி என்னை பெட்டில் தோற்று போக வச்சிட்டீங்களே...”
“ஹேய் வாலு என்னை மட்டும் எதுவும் சொல்ல கூடாது செய்ய கூடாதுன்னு ஆயிரத்தி எட்டு ரூல்ஸ் போட்டுட்டு, நீ இப்படி சைடில வில்லி வேலை எல்லாம் வேற செய்தீயா?”
“க்கும்... உனக்கு போய் இத்தனை அழகான நல்ல அண்ணியா? பாவம் அவங்க வாழக்கை நல்ல விதமா இருக்கட்டுமேன்னு சொன்னால் அது வில்லித் தனமா? என்ன உலகமடா இது?”
“வாலு!”
“சரி சரி நான் போய் அண்ணி ஓகே சொன்ன விஷயத்தை அம்மாவிடம் சொல்லிட்டு பாட்டியிடமும் சொல்ல சொல்றேன்... லேட்டா தெரிஞ்சா நல்லா இருக்காது... ஆனாலும் நீ லக்கிடா அண்ணா! அண்ணி நீங்க தான் பாவம்...”
சொல்லிவிட்டு, அவள் ஒரு துள்ளலுடன் ஓட, வினய்யும், பிரீதாவும் நிதானமான நடையுடன் வீடு நோக்கி நடந்தனர்.
“நானா வந்து பேசலை... உங்க பாட்டி சொல்லி தான் நான் பேச வந்ததே... அவங்க அதை சொல்ல போறாங்க... உங்க பெட்”
அவளை பேச விடாமல் தடுத்து,
“அதெல்லாம் பாட்டி சொல்ல மாட்டாங்க... இப்போ நான் சொல்லி தான் உன்னிடம் பேசினேன்னு உன் கிட்ட சொன்னாங்களா என்ன?”
அவன் சொன்னது புரிந்து அவள் விழி விரித்து பார்க்க, அருகில் வந்து அவள் கன்னத்தில் முத்தமிட்டு கண் சிமிட்டி சிரித்தான், அவளின் காதல் கதையின் கதாசிரியனும், கதாநாயகனுமான வினய்!
Every love story is beautiful, but ours is my favorite!